அமெரிக்காவில் நடைபெற்ற வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழகத்தின் வில்சன் காலேஜ் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் பட்டமளிப்பு விழாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனில் கோச்சர் மற்றும் அவரது மனைவி மரிலின் மாணவர்களுக்கு வாழ்நாள் நினைவுப் பரிசை வழங்கினர்.
அவர்கள், 176 பட்டப்படிப்பு மாணவர்களின் இறுதி ஆண்டுக் கல்விக் கடன்களை முழுமையாகச் செலுத்துவதாக அறிவித்தனர். கூடுதலாக, 26 முதுநிலை மாணவர்களும் இந்த உதவியால் பயனடைகிறார்கள்.
அறிவிப்பு வெளியாகியவுடன், அரங்கமே எழுந்து நின்று அவர்களுக்கு நன்றி தெரிவித்தது. இந்த உதவி, அனில் கோச்சரின் தந்தை பிரகாஷ் சந்த் கோச்சர் அவர்களின் நினைவாக வழங்கப்பட்டது.
அனில் கோச்சர் தனது உரையில், “என் தந்தையை நினைவுகூரும் வகையில், உங்கள் இறுதி ஆண்டுக் கல்விக் கடன்களை நாங்கள் செலுத்துகிறோம்.
நீங்கள் பட்டம் பெறுவதோடு மட்டுமல்லாமல், உங்கள் கனவுகளை அடைய கடினமாக உழைத்து சுதந்திரம் பெற வேண்டும். எண்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளைஞர் (அனில் கோச்சரின் தந்தை) நம்பிக்கையையும் உறுதியையும் தவிர வேறு எதுவும் இல்லாமல், இந்தியாவிலிருந்து ராலேவுக்கு ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்தார்.
அந்தப் பயணம் எங்கு அழைத்துச் செல்லும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அது உருவாக்கும் வாழ்க்கையையோ, அல்லது ஒரு நாள் தன் மகன், தன்னை வரவேற்ற அதே கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற இங்கே நிற்பான் என்பதையோ அவர் கற்பனை கூட செய்திருக்க முடியாது” என்பதை கூறி மாணவர்களை ஊக்குவித்தார்.