India
oi-Vigneshkumar
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 50% வரை அங்குப் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயில் இந்துக்களிடையே முக்கியமான புண்ணியத் தலமாகக் கருதப்படுகிறது. இந்த இடத்தில் தான் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. அங்கு அமைந்துள்ள கோயிலுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தரும் பக்தர்கள் காணிக்கை தருகிறார்கள். அந்த காணிக்கை பணம் திருடப்பட்டதே பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.

50% குறைந்த மக்கள் கூட்டம்
இருப்பினும், அயோத்தி உண்டியல் திருட்டு விவகாரம் வெளியான பிறகு ராமர் கோயிலுக்குச் செல்லும் முக்கியப் பாதையான ராம்பாத்தில் இப்போது பக்தர்கள் நடமாட்டம் கணிசமாகக் குறைந்துள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனமான தி வையர் செய்தி வெளியிட்டுள்ளது.. ராமர் கோயில் அறக்கட்டளை நிதி மோசடி புகார்களின் விளைவாக, இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சுமார் 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பெயர் வெளியிட விரும்பாத பல உள்ளூர் வியாபாரிகள் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவே கூறுகிறார்கள்.
இன்னொரு தரப்பினர், கடந்த ஒரு வாரமாகவே மக்கள் கூட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் பாஜகவிற்குக் கெட்ட பெயராக அமைந்துவிட்டதாகக் கூறுகின்றனர்.
அயோத்தி
முன்னதாக, லக்னோ இந்திய மேலாண்மை நிறுவனம் 2026 பிப்ரவரியில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, ராமர் கோயில் திறக்கப்பட்ட முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 11 கோடி பேர் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர். இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வருமானம் ஐந்து மடங்கு வரை உயர்ந்ததாக அந்த ஆய்வு தெரிவித்தது.. அயோத்திக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை 2020-ல் 60 லட்சத்திலிருந்து, 2024-ல் 16 கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில், ஜூன் 26ம் தேதி ராமர் கோயில் அறக்கட்டளை நிதி முறைகேடு வெளிச்சத்திற்கு வந்து போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்பிறகே பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள பக்தர்கள் கூறும் தகவல்களையும் ஆங்கில செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அயோத்தியைச் சேர்ந்த ஆஷா தேவி கூறுகையில், “உங்களால் நல்லது செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் கெட்டது செய்யாதீர்கள். மக்கள் பல இடங்களிலிருந்து நம்பிக்கையோடு இங்கு வருகிறார்கள். எனவே, நன்கொடை நிதியைத் திருடியவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஒரு பக்தனாகப் பார்க்கும்போது இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. பக்தர்கள் காணிக்கை தரும் ரொக்கம், பொருட்கள் எவ்வளவு பெறப்பட்டுள்ளன என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
பாஜக அரசு
இதனால் பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் அது முழு கோபமாக மாறவில்லையாம். இன்னுமே பலர் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்களாம்.. குற்றம் செய்தவர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் யோகி அரசு அவர்களைக் கண்டறிந்து தண்டிக்கும் என்றும் மோடி- அமித் ஷா – யோகி ஆகியோரின் கண்காணிப்பில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ஒரு தரப்பினர் கூறுகிறார்களாம்.
அதேநேரம் இந்த விவகாரத்தை யோகி அரசு சரியாகக் கையாளவில்லை என அங்குள்ள மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள். முறையான வழக்குப் பதிவு செய்யப்படாமல் 12 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறும் அவர்கள், புகார்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர் திருட்டு
இதற்கிடையில், இந்த விவகாரம் அரசியல் ரீதியாகவும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஏப்ரல் 27 முதல் ஜூன் 5 வரையிலான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 39 நாட்களில் 70 முறை முறைகேடு அரங்கேறியிருப்பது தெரியவந்துள்ளதாகச் சிறப்பு புலனாய்வுக்குழுவின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதை அங்குப் பெரிய விவகாரமாக எடுத்துச் செல்ல காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் முயல்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் சூழலில், அதுவரை இந்த விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருந்து தேர்தலில் இதைப் பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் முயல்கின்றன.

