அரசியலில் குதிக்கும் ராகவா லாரன்ஸ்…  விஜய்யா? அண்ணாமலையா? யாருடன் கைக்கோர்கிறார்? – Kumudam

Spread the love

ரஜினியின் தீவிர ரசிகர்… நடிகர்.. இயக்குநர்.. டான்ஸ் மாஸ்டர்.. என பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ரஜினி அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் அதில் முக்கிய பொறுப்பை வகித்திருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரஜினியும் கட்சி தொடங்கவில்லை, ராகவாவும் அரசியலுக்கு வரவில்லை. 

இத்தகையச் சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவின. இந்த தகவல் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 7ஆம் தேதி விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

தில், “திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பல ஊடகங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு என் ஊடக நண்பர்கள் பலரும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட்தோடு நேரில் சந்திக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அதிகமாக பேசப்படும் நிலையில், இதுதொடர்பாக நான் ஒரு விஷயம் நேரடியாக சொல்லவேண்டும். பென்ஸ் படப்பிடிப்பு ஜூன் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால் ஜூன் 11 ஆம் தேதி என் தாயாரின் ஆசிர்வாதத்துடன் என் முடிவை அறிவிக்க உள்ளேன்” என்று ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவையொட்டி தனது முடிவை ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் ராகவா. அதில், “நான் அரசியலுக்குள் வருவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. பணம் சம்பாதிக்கவோ, பதவியைப் பெறவோ எனக்கு எந்த நோக்கமும் இருந்ததில்லை. நான் நம்பிக்கை வைத்திருந்த, எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்குள் வந்தால், அவருடன் இணைந்து செயல்பட்டு, தனிப்பட்ட முறையில் நான் செய்து வந்த சமூகப் பணியை விட பெரிய அளவில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே என் ஒரே எண்ணமாக இருந்தது.

ஆனால் இன்று, சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் நுழைய வேண்டிய ஒரு கட்டத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

இன்று காலை 10:00 மணிக்கு நான் பகிரவுள்ள வீடியோவில், அரசியல் குறித்த என்னுடைய புரிதல், அது என் வாழ்க்கைக்குள் வந்த விதம், அரசியல் குறித்து என் தாயாரின் பார்வை, மேலும் என் பயணத்தை வடிவமைத்த சில முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்கள் குறித்து, என் மனதில் உள்ளதை முழு நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் பகிர்ந்துள்ளேன்.

அந்த வீடியோவை இறுதிவரை பார்த்து, உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த முக்கியமான பயணத்தை உங்கள் அனைவரின் ஆசீர்வாதத்துடன் தொடங்கும் இந்த நேரத்தில், உங்கள் ஆலோசனையும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் மதிப்புமிக்கவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வருவது உறுதியாகியுள்ள நிலையில், அவர் தனது நண்பர் விஜய்யுடன் இணையவுள்ளரா? அல்லது அண்ணாமலையுடன் இணையவுள்ளரா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. 

எனக்கு நெருக்கமான ஒருவர் அரசியலுக்குள் வந்தால், அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று நினைத்ததாக்க் கூறும் ராகவா, நிச்சயமாக விஜய்யுடன் தான் இணைவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், திருச்சி கிழக்கு தொகுதியில் அவரை நிறுத்தவும் தவெக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மறுபக்கம், ரஜினியின் ஆதரவாளரான அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளதால், அவருடன் கைக்கோர்க்கவே ராகவா விரும்புவதாகவும் கூறப்படுகிறது. 

எது எப்படியோ, இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடும்..  

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *