”அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக்கூடாது… “ – முதலமைச்சரை சாடிய கிருஷ்ணசாமி.! – Kumudam

Spread the love

கடந்த செப்சம்பர் 27, 2025ல் கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க தலைவர் விஜய்யின், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது தான் 41 பேர் உயிரிழந்த  கோர சம்பவம் அரங்கேறியது. 100க்கும் மேற்பட்டோர் படுகாயமும் அடைந்திருந்தனர். அன்று இந்த அசம்பாவிதத்தை பார்த்து அதிர்ந்துப்போன விஜய், பதற்றத்தில் அப்போதே சென்னைக்கு திரும்பிவிட, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் அமைச்சர்களின் பட்டாளத்தோடு கரூருக்கு படையெடுத்தார். விஜய் மீதும், தி.மு.க அரசு மீதும் மாறிமாறி விமர்சனங்கள் வலுத்த நிலையில், ஒரு நபர் விசாரணை ஆணையம், சி.பி.ஐ விசாரணை என்று விவகாரம் அடுத்தகட்டத்திற்கு நகர்ந்து தற்போதுவரை விசாரணை நடைபெற்று வருகின்றது. 

அப்போதில் இருந்து இப்போது வரை விஜய் கரூர் பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை என்றுக் கூறப்படும் நிலையில், தற்போது இடைத்தேர்தலுக்கு முன்பு கரூருக்கு செல்லவிருக்கிறார். இத்தனை நாள் கண்ணுக்குத் தெரியாத கரூர் மக்கள், தற்போது தேர்தல் நெருக்கத்தில் மட்டும் கண்ணுக்குத் தெரிகிறார்களா? என்று முதலமைச்சர் விஜயை சாடி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ஒரு அரசு பதவி வழங்கப்பட்டு அதற்கான ஆணையை விஜயை நேரில் வழங்க இருப்பதாக்க் கூறப்படும் நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. 

சினிமா ஷூட்டிங்கின் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு கம்பெனி தான் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, அரசு வேலை வழங்கக் கூடாது என்று விமர்சன்ங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 

இத்தகையச் சூழலில், அரசு வேலை வழங்கும் முதலமைச்சர் விஜய்யின் முடிவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.  

அதில், “நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை முதல்வர் விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும்! அரசு நெய்யில் ‘ஸ்வீட்’ செய்யக்கூடாது! 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் நடந்த விஜய் அவர்களின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தார்கள். அதற்கான காரணம் என்ன? இது திட்டமிட்டு நடந்த செயலா அல்லது விபத்தா? ஏறக்குறைய ஒரு வருடமாகியும் அதற்கான விடை இதுவரை கிடைக்கவில்லை.

இந்த நிகழ்வு குறித்து கரூர் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த ஆணையம் கலைக்கப்பட்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் கண்காணிப்பில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனா உட்படப் பலரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை தந்திடவும், அந்த ஆணையை விஜய் அவர்களே நேரடியாக வழங்கிடவும் நாளை (10.07.2026) அன்று அவர் கரூர் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே த.வெ.க சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது.

முக்கியச் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள அந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு வேலை கொடுக்கப்பட்டால், அவர்களால் நேர்மையான சாட்சியங்களை வழங்க முடியாது. அவர்கள் அனைவரும் பிறழ் சாட்சிகளாக மாறிவிடுவார்கள். அதனால் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடலாம்; 41 பேரின் மரணத்திற்கு நீதி கிடைக்காமலும் போய்விடும்.

எனவே, நாளை கரூரில் மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை விஜய் அவர்கள் ரத்து செய்ய வேண்டும் எனப் புதிய தமிழகம் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *