அலறும் ஐரோப்பா.. பச்சைத் தண்ணீரை கூட கொதிக்க வைக்கும் கொடூர வெப்பம்! கருகும் உயிர்கள்.. என்ன காரணம்? | Europe Heatwave Explained: Omega Block Triggers Deadly Record-Breaking Temperature

Spread the love

International

oi-Rajkumar R

பாரிஸ்: ஐரோப்பா முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை நிலவி வருகிறது. பல நாடுகளில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி பதிவாகி வருகிறது. இந்த அசாதாரண வெப்பம் காரணமாக இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அச்சம் தெரிவித்துள்ளது. இதனால் பல நாடுகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பா உலகிலேயே மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமாக மாறியிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ள நிலையில், பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல் உள்ளிட்ட நாடுகளில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உலக சராசரியை விட இரு மடங்கு வேகத்தில் ஐரோப்பாவின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது. இந்த வெப்ப அலைக்கு பின்னால் என்ன காரணம்? ஏன் இவ்வளவு தீவிரமாக வெப்பம் அதிகரித்துள்ளது என்பது குறித்து வானிலை நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Europe Heatwave Temperature

ஒமேகா பிளாக்

இந்த வெப்ப அலைக்கு முக்கிய காரணமாக “ஒமேகா பிளாக்” (Omega Block) எனப்படும் வானிலை அமைப்பு கூறப்படுகிறது. இது வளிமண்டலத்தில் ஏற்படும் ஒரு அரிதான காற்றழுத்த அமைப்பு ஆகும். வட ஆப்பிரிக்காவில் இருந்து மிக அதிக வெப்பமுள்ள காற்றை ஐரோப்பாவுக்கு கொண்டு வரும் உயர் காற்றழுத்த மண்டலம், இரண்டு குறைந்த காற்றழுத்த மண்டலங்களுக்கு நடுவில் சிக்கிக்கொள்கிறது. இந்த அமைப்பு கிரேக்க எழுத்தான Ω (ஒமேகா) வடிவத்தை ஒத்திருப்பதால் இதற்கு “ஒமேகா பிளாக்” என்று பெயர் வந்தது.

ஹீட் டோம்

இந்த அமைப்பு உருவான பிறகு அது எளிதில் நகராது. பல நாட்கள் அல்லது சில நேரங்களில் பல வாரங்கள் கூட ஒரே இடத்தில் நீடிக்கும். இதனால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கும். இதனை ஐரோப்பிய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் (ECMWF) நிபுணர் சமந்தா பர்கெஸ், “வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் போன்ற நிலை” என்று விளக்கியுள்ளார். இந்த ஒமேகா பிளாக் நீண்ட நேரம் நீடித்தால், அது “ஹீட் டோம்” (Heat Dome) எனப்படும் மற்றொரு ஆபத்தான வானிலை அமைப்பாக மாறும். இதை ஒரு பாத்திரத்தின் மீது மூடி வைப்பதற்கு ஒப்பிடலாம்.

உயர் காற்றழுத்தம் காரணமாக மேலிருந்து கீழே இறங்கும் காற்று மேலும் சூடாகிறது. அதே நேரத்தில் தரையில் உருவாகும் வெப்பம் வெளியேற முடியாமல் சிக்கிக் கொள்கிறது. இதனால் மேகங்கள் உருவாகுவதில்லை. மழையும் பெய்யாது. காற்றின் வேகமும் குறைந்து விடுகிறது. தொடர்ந்து நேரடி சூரிய ஒளி பூமியை தாக்குவதால் நிலப்பரப்பு மேலும் மேலும் சூடாகி வெப்பநிலை வேகமாக உயர்கிறது.

புவி வெப்பமடைதல்

இந்த வகையான வானிலை அமைப்புகள் புதிதல்ல என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். ஒமேகா பிளாக் மற்றும் ஹீட் டோம் போன்ற நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளிலும் அவ்வப்போது உருவாகின்றன. ஆனால் தற்போது அவற்றின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதற்கு காலநிலை மாற்றமே முக்கிய காரணம் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். புவி வெப்பமடைதல் காரணமாக உலகின் அடிப்படை வெப்பநிலையே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இதுபோன்ற வானிலை அமைப்புகள் உருவாகும்போது, முன்பை விட அதிக வெப்பத்தை உருவாக்குகின்றன. அதனால் வெப்ப அலைகள் மிகவும் தீவிரமாகவும், நீண்ட காலம் நீடிப்பதாகவும் மாறியுள்ளன.

காட்டுத்தீ அபாயம்

இங்கிலாந்து வானிலை ஆய்வு மையத்தின் தலைமை வானிலை நிபுணர் வில் லாங் கூறுகையில், “ஒருமுறை இந்த வானிலை அமைப்பு உருவானால், அதை உடைக்கும் அளவுக்கு வேறு வானிலை சக்திகள் இல்லாததால், அது தானாகவே தொடர்ந்து வலுப்பெற்று பல நாட்கள் நீடிக்கிறது” என்று தெரிவித்துள்ளார். வெப்ப அலை காரணமாக பல நாடுகளில் காட்டுத்தீ அபாயமும் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

அதீத வெப்ப அலைகள்

குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுபோன்ற அதீத வெப்ப அலைகள் இனி அடிக்கடி ஏற்படலாம் என்றும், உலக நாடுகள் உடனடியாக காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *