India
oi-Vigneshkumar
இந்தூர்: கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து நாடு முழுக்க பள்ளி மாணவர்கள் தங்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அப்படி தான் இப்போது மத்திய பிரதேச மாநிலத்தில் திடீரென பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரப்பான் பூச்சி கட்சியினர் கடந்த மாதம் டெல்லியில் மிக பெரிய போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டி இருந்தது. இதை தொடர்ந்து நாடு முழுக்க பள்ளி மாணவர்கள் போராட்டத்தால் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது.

போராட்டம்
மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் உள்ள ஏகலைவா ஆதர்ஷ் குடியிருப்பு பள்ளி மாணவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.
செந்த்வா அருகே உள்ள ஜம்லி பகுதியில் செயல்பட்டு வரும் இந்த பள்ளியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் காலை சுமார் 7.30 மணியளவில் தங்களது பேரணியை தொடங்கினர். சுமார் 15 கிலோமீட்டர் தூரம் நடந்து மாவட்ட தலைமையகத்திற்கு பேரணியாகவே சென்றனர். அங்கு கலெக்டர் ஜெயதி சிங்கை நேரடியாக சந்தித்து தங்களது பிரச்சினைகளை தெரிவிப்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.
தர்ணா
பேரணியின்போது மாணவர்கள் திடீரென ஆக்ரா- மும்பை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சிறிது நேரம் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்தும் முடங்கியது. தங்களிடம் பேச கலெக்டர் நேரடியாக வர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாஜிஸ்திரேட், கூடுதல் கலெக்டர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாணவர்களிடம் பேரணியை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறிய மாணவர்கள், கலெக்டர் அலுவலகம் செல்வதில் உறுதியாக இருந்தனர்.
அடுக்கடுக்கான புகார்
பள்ளியில் தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும், “நாங்கள் ஏகலைவா ஜம்லி பள்ளியில் படித்து வருகிறோம். நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் எதையுமே நிறைவேற்றவில்லை. நாங்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை எங்கள் கண் முன்னே குப்பையில் போட்டனர். எங்கள் பெற்றோருடன் மீட்டிங் நடத்தினர். அதிலும் கூட எங்கள் பெற்றோர்களை உரிய மரியாதையுடன் நடத்தப்படவில்லை” என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும் அவர்கள், “எங்களிடம் பேசும்போதும் பாரபட்சமாகவே பேசினார்கள்.. பள்ளியில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த வேண்டும். எங்கள் பள்ளியில் ஆடிட்டோரியம் கட்டி வருகிறார்கள். அந்த பணிகளையுமே விரைந்து முடிக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர்
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கலெக்டர் ஜெயதி சிங், மாணவர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மாணவர்கள் தெரிவித்த புகார்கள் குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கலெக்டர் ஜெயதி சிங் மேலும் கூறுகையில், “இந்த விவகாரத்தை நாங்கள் விசாரித்து வருகிறோம். ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிந்ததும், விதிமுறைகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்களுக்கு மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.. போராட்டம் மற்றும் விசாரணையின்போது எந்தவித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். மாணவர்கள் முன்வைத்த அனைத்து குறைகளும் உரிய முறையில் விசாரிக்கப்படும்” என்றும் கலெக்டர் உறுதியளித்தார்.