கேரளம் மாநிலம் காசர்கோடு மாவட்டம் கும்பளா அருகே உள்ள கிதூர் குண்டங்கேரடுக்கை பகுதியைச் சேர்ந்த ஜெயானந்தன் – தேவி தம்பதியினரின் மகள் பிரபுல்லா (26).
பாலக்காட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். பிரபுல்லாவும் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்த மணி (30) என்பவரும் காதலித்து வந்தனர். பாலக்காட்டில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயின்று கொண்டிருந்தபோது பிரபுல்லாவுடன் மணிக்குப் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது.
இவர்களது காதல் பெற்றோருக்குத் தெரியவந்ததை அடுத்து, இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த 9 மாதங்களுக்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிதி நிறுவனத்தில் தற்காலிக பணியாளரான பிரபுல்லா, தனது பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின்னர் திருமணம் வைத்துக்கொள்ளலாம் எனக் கூறியிருந்தார்.
இதற்கிடையே பிரபுல்லாவின் பணி நிரந்தரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் மணி பைக்கில் சென்றுகொண்டிருந்த சமயத்தில் பின்னால் வந்த கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். சில வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மணி, இரண்டு மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
மணியின் மரணம் அவரது காதலி பிரபுல்லாவை நிலைகுலையச் செய்தது. மணியின் நினைவாகவே இருந்தார் பிரபுல்லா. இந்த நிலையில் பிரபுல்லாவின் குடும்பத்தினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர் ஒருவரின் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தனர்.
வீட்டில் தனியாக இருந்த பிரபுல்லா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் ஒரு கடிதத்தைக் கண்டுபிடித்தனர். பிரபுல்லா எழுதிய அந்தக் கடிதத்தில், தனது காதலன் மணியின் அருகிலேயே தனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என உருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரபுல்லாவின் இறுதி விருப்பத்தைத் தெரிந்துகொண்ட அவரது பெற்றோர் மற்றும் மணியின் குடும்பத்தினரும் அதை நிறைவேற்ற முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து பிரபுல்லாவின் உடலை மணியின் உடல் அருகிலேயே அடக்கம் செய்யும் விதமாக நேற்று மதியம், உடல் தமிழ்நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டது.
இன்று மணியின் வீட்டு வளாகத்தில், அவரது உடலுக்கு அருகே பிரபுல்லாவின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. காதலன் மரணத்தைத் தொடர்ந்து காதலியும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.