International
oi-Vigneshkumar
கீவ்: ரஷ்யாவுக்கு எதிரான போருக்கான கூடுதல் வருவாயை திரட்ட, நாட்டில் ஆபாச தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, அதை முறையான வரி அமைப்புக்குள் கொண்டுவர உக்ரைன் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கூடுதல் வருவாய் திரட்டுவதுடன், ஊழலை கட்டுப்படுத்தவும் முடியும் என பலரும் கருதுகின்றனர்.
ரஷ்யா உக்ரைன் இடையேயான பல ஆண்டுகளாக போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி, பலரும் முயன்றுவிட்டனர். இருப்பினும், போர் முடிவுக்கு வருவது போல தெரியவில்லை. இந்த நீடித்த போர் காரணமாக இரு நாடுகளுக்குமே பொருளாதார ரீதியாக மிக பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக உக்ரைன் நிலைமை மோசமாகவே இருக்கிறது.

ஆபாச படங்கள்
இதற்கிடையே ஆபாச படங்களை அனுமதிக்க உக்ரைன் முடிவு செய்திருக்கிறதாம். தற்போது உக்ரைனில் ஆபாச படங்களை தயாரிப்பது, விநியோகிப்பது மற்றும் வைத்திருப்பது சட்டவிரோதமாகும். இதற்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம். பெயரளவுக்கு தடை இருந்தாலும் ஆன்லைன் தளங்கள் மூலமாகவும், வெளிநாடுகளில் இருந்தும், சட்ட கட்டுப்பாடுகளை தவிர்க்கும் வகையிலும் ஏராளமானோர் இந்த தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் தான் ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிப்பது குறித்து உக்ரைன் ஆலோசித்து வருகிறது. உக்ரைன் நாடாளுமன்றத்தின் நிதி குழு தலைவரும் எதிர்க்கட்சி எம்.பி.யுமான யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக், ஆபாச தொழிலை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிக்கு முன்னெடுத்துள்ளார்.. இந்த மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் முதல் கட்ட வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டு, தற்போது இரண்டாவது கட்ட வாக்கெடுப்பிற்காக காத்திருக்கிறது.
கூடுதல் வருவாய்
இதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி வரி விதித்தால், அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் டாலர் வரை வருவாய் கிடைக்கலாம் என ஜெலெஸ்னியாக் மதிப்பிட்டுள்ளார். உக்ரைனின் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவு தேவையான சுமார் 120 பில்லியன் டாலருடன் ஒப்பிடும்போது இது சிறிய தொகை என்றாலும், சுமார் 30,000 ட்ரோன்களுக்கு இந்த வருவாய் போதுமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு பெயரளவுக்கு மட்டுமே தடை இருந்தாலும் மிக பெரிய ஆபாச தொழில் நெட்வொர்க் இயங்கி வருகிறது. இதனால் ஊழல் அதிகமாக இருக்கிறது என்றும் அரசுக்கு கிடைக்க வேண்டிய வரியும் கிடைப்பதில்லை என்பதாலேயே அதை சட்டப்பூர்வ கட்டமைப்பிற்குள் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
பின்னணி
பிரபல ஆபாச பட தளம் ஒன்றில் இருந்து உக்ரைன் அரசு சமீபத்தில் சில தகவல்களையும் கேட்டு பெற்றது. அதில் 2023ல் மட்டும் உக்ரைன் நாட்டை சேர்ந்த 7,900 பேர் அந்த தளம் மூலமாக மட்டும் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வருமானத்தை ஈட்டியுள்ளனர். இருப்பினும், அதை சட்டப்பூர்வமாக தெரிவித்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் பலரும் அதை வருமானமாக காட்டவில்லையாம். இதனால் அந்த தொகைக்கான வரி உக்ரைன் அரசுக்கு கிடைப்பதில்லை. அதேபோல அந்த வருமானத்திற்கு வரி விதிக்கப்பட்டால் இப்போது சட்டவிரோதமாக இருக்கும் ஆபாச படங்களை உக்ரைன் ஏற்பது போல ஆகிவிடும் என்பதால் அந்நாட்டு அரசும் இதில் குழப்பத்திலேயே இருக்கிறது.
இதன் காரணமாகவே முதலில் ஆபாச படங்களுக்கான தடையை நீக்கிவிட்டு, அதை சட்டப்பூர்வ அமைப்பில் கொண்டு வர உக்ரைன் முடிவு செய்துள்ளது. அப்படி கொண்டு வந்த பிறகு, அதற்கு வரி விதித்ததால் போருக்கும் உதவியாக இருக்கும் என்பதே அந்நாட்டு அரசின் நிலைப்பாடாக இருக்கிறது.

