International
oi-Hema Vandhana
காங்கோ: காங்கோ மழைக்காடுகளின் ஆழத்தில் இதுவரை மனிதக்கண்களுக்குப் புலப்படாத ஒரு புதிய விசித்திரக் குரங்கு இனத்தை உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். பிரகாசமான ஆரஞ்சு நிற உதடுகளுடனும், முகமூடி போன்ற தோற்றத்துடனும் இருக்கும் இந்த உயிரினம், சிங்கத்தைப் போல கர்ஜிக்கும் குணத்தை கொண்டுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட மிக அரிய வனவிலங்கு கண்டுபிடிப்பாகக் கருதப்படும் இந்த அதிசயம் பற்றிய சுவாரசியமான தகவல்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
மருத்துவ உலகிலும் சரி, வனவிலங்கு ஆராய்ச்சியிலும் சரி, சில தகவல்கள் நம்மை அப்படியே ஆச்சரியத்தில் உறைய வைத்துவிடும். அந்த வகையில் ஆப்பிரிக்கக் காடுகளில் இருந்து இப்போது வந்திருக்கும் ஒரு தகவல், ஒட்டுமொத்த உலக வனவிலங்கு ஆர்வலர்களையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டின் அடர்ந்த மழைக்காடுகளில், இதுவரை யாருமே பார்த்திராத ஒரு புதிய குரங்கு இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்திருக்கிறாரகளாம்.. இந்த தகவல் “பிளோஸ் ஒன்” என்ற புகழ்பெற்ற அறிவியல் இதழில் அதிகாரப்பூர்வமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதென்ன ஸ்பெஷல் இந்த குரங்குக்கு?
இந்த குரங்கை பார்த்ததுமே பலருக்கும் ஆச்சரியம் தருவது அதன் முக அமைப்பு தான். அந்த குரங்கின் வாய் மற்றும் மூக்குக்கு கீழே ஆரஞ்சு நிறத்தில் முடிகள் அடர்த்தியாக இருக்கின்றன. அதேபோல, கன்னத்தில் முடிகள் எதுவுமே இல்லாமல் சாம்பல் நிற தோலுடன் காட்சி அளிக்கிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் யாரோ முகமூடி போட்டிருப்பது போலவே இருக்கிறதாம்..
உடம்பு முழுவதும் பளபளக்கும் கறுப்பு நிற முடிகளும், வாலுக்கு கீழே வெள்ளை நிறத்தில் ஒரு சின்ன பகுதியும் அமைந்திருக்கிறது. சுமார் 7 கிலோ எடை கொண்ட இந்த குரங்குக்கு “கொலோபஸ் காங்கோயென்சிஸ்” என்று ஆராய்ச்சியாளர்கள் பெயர் சூட்டியுள்ளனர். ஆனால் அங்கு வாழும் பழங்குடி மக்கள் இதனை செல்லமாக “லிக்வேலி” என்று அழைக்கிறார்கள்.
தோற்றம் மட்டும் அல்ல, இந்த குரங்கு கத்தும் முறையும் விசித்திரமாகவே இருக்கிறது. வழக்கமான குரங்குகளை போல கீச் கீச் என்று கத்தாமல், ஒரு சிங்கத்தைப் போல தொண்டையின் ஆழத்தில் இருந்து சத்தமாக கத்துகிறதாம் இந்த குரங்கு.
18 ஆண்டுகள் நீண்ட தேடல்
இந்த குரங்கைப் பற்றிய கதை இன்றோ நேற்றோ தொடங்கியது அல்ல. கடந்த 2008ம் ஆண்டிலேயே இதைப் பற்றிய முதல் தகவல் கிடைத்தது. லோமாமி தேசியப் பூங்காவில் எடுக்கப்பட்ட ஒரு போட்டோவில், மரக்கிளைகளுக்கு இடையே மறைந்திருந்த ஒரு விசித்திர உருவம் தான் அறிவியலாளர்களின் சந்தேகத்தைத் தூண்டியது.
அதன் பிறகு 2018-ல் இதன் தெளிவான படம் கிடைத்ததும், ஆராய்ச்சியாளர்கள் அந்த காட்டைச் சுற்றியுள்ள 52 கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.. ஆனால் வெறும் 8 கிராமங்களை சேர்ந்த வேட்டைக்காரர்கள் மட்டுமே இந்த குரங்கைப் பார்த்திருப்பதாக கூறினார்கள்.
இதனைத் தொடர்ந்து 2018 முதல் 2022 வரை 4 ஆண்டுகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டன.. பிறகுதான், 2 பெரிய நதிகளுக்கு இடைப்பட்ட 1,700 சதுர கிலோமீட்டர் காட்டின் உள்ளே மட்டுமே இவை வாழ்கின்றன என்பதை கண்டுபிடித்தனர்.
பிளட் டெஸ்ட்டில் வந்த உண்மை
இது உண்மையில் புதிய இனம் தானா என்பதை உறுதிப்படுத்த, இதன் டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து ஆய்வு செய்தனர். அப்போது அதற்கு மேல் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இந்த குரங்கின் மரபணுப் பண்புகள், அதற்கு பக்கத்தில் வாழும் மற்ற குரங்குகளோடு ஒத்துப் போகவில்லை. மாறாக, அங்கிருந்து சுமார் 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கேமரூன், காபோன் போன்ற நாடுகளில் வாழும் ஒரு வகை கறுப்பு குரங்கினத்தோடு தான் ஒத்துப் போகிறது.
அதாவது சுமார் 35 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த குரங்கு இனம் மற்ற இனங்களில் இருந்து தனியாகப் பிரிந்து வாழத் தொடங்கிவிட்டது என்பதை அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 5வது புதிய குரங்கு இனம் இது என்பதால், இது மிகவும் அரிய ஒரு கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. ஆனால், மிகவும் குறைந்த பரப்பளவில் மட்டுமே இவை வாழ்வதாலும், காடுகளை அழிப்பதாலும் இந்த புதிய உயிரினம் உடனே அழியும் அபாயத்தில் சிக்க வாய்ப்புள்ளது. அதனால், இதனைப் பாதுகாக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.