`இங்கதான் இருப்பா’ – சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொன்றுவிட்டு உறவினர்களுடன் சேர்ந்து தேடிய இளைஞர்

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுமி நான்காம் வகுப்பு படித்து வந்தாள். அவளது பெற்றோர் விவசாய வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், உடல் நிலை சரியில்லாமல் சிறுமி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாள். சிறுமியின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டில் சிறுமியைக் காணவில்லை. அவர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் சிறுமி எங்கேயும் கிடைக்கவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். அந்த கிராமத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அந்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த 25 வயது சாஹில் என்ற வாலிபர் என்று தெரியவந்தது. சாஹில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசிப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாஹிலிடம் தீவிர விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சிறுமியை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அங்குள்ள கால்வாய் அருகே மரத்திற்கு அடியில் கொலை செய்யப்பட்டு கிடந்த சிறுமியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் நாசிக்-புனே சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்த போலீஸார், “இக்குற்றத்தில் ஈடுபட்ட சாஹில் கிராம மக்கள் மற்றும் சிறுமியின் உறவினர்களோடு சேர்ந்து சிறுமியை தேடினான். சிறுமியின் பெற்றோர் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர் என்பதை தெரிந்து கொண்டு இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளார்” என்று தெரிவித்தனர்.

இது குறித்து துணை முதல்வர் சுனேத்ரா பவார் கூறுகையில், “இது மிகவும் துரதிஷ்டவசமான ஒன்று. வெளிப்படையாக போலீஸார் இவ்வழக்கை விசாரித்து குற்றவாளி தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார். இவ்வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டுக்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *