
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அதனைத் தொடர்ந்து நாளையும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தி.மலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர ஆந்திரப் பிரதேசத்திலிருந்து மத்திய மகாராஷ்டிரா வரை தெலங்கானா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், மராத்வாடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் வழியாக சுமார் 3.1 கி.மீ. முதல் 4.5 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலவுவதால் தமிழகத்தில் நாளையும் (ஜூன் 27), நாளை மறுதினமும் ஒரு சில இடங்களிலும், 29 முதல் ஜூலை 2-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.