“இடி மின்னலுடன் 9 மாவட்டங்களில் மழை” – சென்னை வானிலை ஆய்வு மையம் – Kumudam

Spread the love

இன்று தமிழகத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மழையின் போது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மித முதல் லேசான மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதேபோன்று, தமிழகத்தின் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், நீலகிரி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெப்பநிலைக்  குறித்து வானிலை அறிக்கையில்:

தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 10 முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. எனினும், வட உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகரிக்கலாம் ஆகஸ்ட் 10 முதல் 14-ம் தேதி வரை வட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட  2 முதல் 3° செல்சியஸ் வரை சற்று அதிகமாக பதிவாகக்கூடும். ஏனைய தமிழக பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும்.

சென்னை குறித்து வானிலை அறிக்கை:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை  37-38° செல்சியஸ் அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை  26-27° செல்சியஸ் அளவிலும் இருக்கக்கூடும்.

மேலும், ஆகஸ்ட் 10 மற்றும் 11-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு  45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும்  காற்று வீச வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 10 முதல் 14-ம் தேதி வரை மத்தியமேற்கு அரபிக்கடலின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு  45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 10 முதல் 14-ம் தேதி வரை தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும், 

மீனவர்களுக்காக எச்சரிக்கை அறிவிப்பாக “வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் மற்றும் கடலில் உள்ளவர்கள் வானிலை முன்னறிவிப்புகளை கவனித்து பாதுகாப்புடன் செயல்படுவது அவசியம்.” என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *