இப்போதும் இந்தியா தயங்குவது ஏன்?
இத்தனை அம்சங்கள் இருந்தும் இந்தியா ஏன் இன்னும் தயங்குகிறது?
காரணம், தொழில்நுட்பம் மட்டுமல்ல, ராஜதந்திரமும் இதில் அடங்கியுள்ளது. ரஷ்யாவின் அரசுக்குச் சொந்தமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட் (Rosoboronexport) நிறுவனம், இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஏற்றவாறு தனது நிபந்தனைகளை மாற்றியிருந்தாலும், இந்தியாவின் பார்வை இப்போது பரந்து விரிந்துள்ளது.
ரஷ்யா இந்தியாவின் நீண்டகால நட்பு நாடு என்றாலும், இப்போது அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற மேற்கு நாடுகளுடனும் இந்தியா பாதுகாப்பு உறவுகளைப் பலப்படுத்தி வருகிறது. ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள், சப்ளை-செயின் சிக்கல்கள் எனப் பல விஷயங்களை இந்தியா யோசிக்க வேண்டியுள்ளது. F-35 போல ஆயிரக்கணக்கில் தயாரிக்கப்படாமல், Su-57 இன்னும் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்படுவதும் ஒரு மைனஸ் பாயின்ட்.
இந்தியாவின் சொந்த ஐந்தாம் தலைமுறை விமானமான AMCA, 2030-களின் மத்தியில்தான் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை காத்திருப்பதா, அல்லது பிராந்திய அச்சுறுத்தல்களைச் சமாளிக்க ரஷ்யாவின் இந்த ஆஃபரை ஏற்றுக்கொள்வதா என்பதுதான் இப்போது இந்திய பாதுகாப்புத் துறை முன் இருக்கும் பெரிய சவால். தொழில்நுட்பம், விலை, ராஜதந்திரம் என அனைத்தையும் எடைபோட்டுத்தான் இந்தியா ஒரு முடிவை எடுக்கும்.