International
oi-Nantha Kumar R
இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்லவில்லை. இந்நிலையில் தான் இந்தியா தனது போக்கை மாற்றி கொள்ளாவிட்டால் நேரடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று மிரட்ல் விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தானின் செயல்பாடு மட்டுமே. பயங்கரவாதிகளை வளர்த்து உலகம் முழுவதும் சப்ளை செய்து வரும் பாகிஸ்தான், நம் நாட்டின் அமைதியை சீர்க்குலைக்கவும் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இதனால் தான் நம்மிடம் இருந்து பிரிந்தாலும் கூட பாகிஸ்தான் இன்னும் பகையாளியாகவே தொடர்கிறது. நாட்டின் வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு பற்றி எல்லாம் கவலைப்படாத பாகிஸ்தான் நம் நாட்டில் குழப்பத்தை எப்படி ஏற்படுத்துவது என்பதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதனால் தான் பாகிஸ்தான் இன்னும் வளராமல் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்நிலையில் தான் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நம் நாட்டை சீண்டி உள்ளார். நம் நாட்டுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளதாவது: ”பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்பும் நாடு. அமைதியாக இருப்பதை பலவீனமாக யாரும் நினைக்க வேண்டாம். பாகிஸ்தானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கைக்கும் பலமாக பதிலடி கொடுக்கப்படும்.
எங்கள் அமைதிக்கான எதிரியாக இந்தியா உள்ளது. பாகிஸ்தானின் ஒவ்வொரு சொட்டு நீரும் எங்களின் ‘சிவப்புக் கோடு’ (தாண்டக்கூடாத எல்லை) என்று நான் தெளிவாக அறிவிக்கிறேன். இந்தியா தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால அதற்கு நேரடியான பதிலடி கொடுக்கப்படும்” என்று திமிராக மிரட்டல் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இப்படி மிரட்டல் விடுத்து இருப்பதன் பின்னணியில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்திருப்பது தான் தான் முக்கிய காரணமாகும். இந்த ஒப்பந்தம் என்பது 1960ம் ஆண்டு உலக வங்கி மத்தியஸ்தம் செய்ய இந்தியா – பாகிஸ்தான் இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் படி சிந்து நதியின் தண்ணீரை 20 சதவீதம் இந்தியாவும், 80 சதவீதத்தை பாகிஸ்தானும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சிந்து நதி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீரை இருநாடுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன்படி மேற்கு நதிகளாக உள்ள சிந்து, ஜீலம், செனாப் உள்ளிட்டவற்றின் தண்ணீர் பாகிஸ்தானுக்கும், கிழக்கு நதிகளாக உள்ள ரவி, பியாஸ், சட்லஜ் ஆகியவற்றின் தண்ணீர் இந்தியாவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்மூலம் சிந்து நதி நீரால் பாகிஸ்தானில் விவசாயம் செழித்தது. மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியானதோடு, நீரில் இருந்து மின் உற்பத்தியும் தயாரிக்கப்பட்டது. தற்போது சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ளதால் பாகிஸ்தானுக்கு தண்ணீர் கிடைக்காமல் உள்ளது. பாகிஸ்தானின் மொத்த மக்கள்தொகை 24 கோடி என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் சுமார் 22 கோடி பேர் சிந்து நதி நீரை நம்பி இருந்தனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அந்த நாடு தொடர்ந்து கூறி வந்தாலும் கூட மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனால் அவ்வப்போது பாகிஸ்தான் அரசியல்வாதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தான் தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இப்படி மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.