5 மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமையில் “இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 8 அன்று டெல்லியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா (யு.பி.டி), இடதுசாரிகள் உள்ளிட்ட மொத்தம் 15 கட்சிகள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சி திடீரென த.வெ.க பக்கமாகச் சென்றதால், ‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க நீடிப்பதில் சிக்கல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தி.மு.க தன் அதிகாரபூர்வ பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு – ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட – ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.