Cricket
oi-Yogeshwaran Moorthi
பிரிஸ்டால்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்கும் கவுதம் கம்பீர், ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தியை பெஞ்ச் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. தொடர்ந்து நேற்றிரவு நடைபெற்ற 3வது போட்டியில் இங்கிலாந்து அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் அடுத்த 2 போட்டிகளில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இன்னொரு டி20 தொடர் தோல்வி ஏற்பட்டால், பிசிசிஐ வேறு சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கம்பீர் அடுத்த 2 போட்டிகளில் வெல்ல தீவிரமாக இருக்கிறார்.
இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ஸ்ரேயாஸ் ஐயரும் இன்னும் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை. இதனால் அழுத்தம் இருவர் மீதும் இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே நாளை நடக்கவுள்ள 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 2 மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
குறிப்பாக மோசமான ஃபார்மில் இருக்கும் துணைக் கேப்டன் திலக் வர்மாவை நீக்கும் முடிவுக்கு கம்பீர் வந்துவிட்டதாக தெரிகிறது. திலக் வர்மாவை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க திட்டமிட்டுள்ளார். ஆனால் அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷியை தொடக்கம் வீரர்களாக களமிறக்கிவிட்டு சஞ்சு சாம்சனை நம்பர் 3ல் இறக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
இதனால் இஷான் கிஷன் நம்பர் 4 அல்லது நம்பர் 5ல் களமிறங்கக் கூடும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் இங்கிலாந்து மண்ணில் வருண் சக்கரவர்த்தி தடுமாறி வருகிறார். இதனால் மீண்டும் வாஷிங்டன் சுந்தரை களமிறக்க கம்பீர் ஆயத்தமாகியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா இருவரும் ஒரே அணியில் விளையாட முடியாது என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.
இதனை கம்பீர் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி புரிந்து கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பிலும் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபேம் அக்சர் படேல் என்று இடதுகை பேட்ஸ்மேன்கள் நிரம்பி இருக்கின்றனர். இதனால் சஞ்சு சாம்சனின் தேவை இயல்பாகவே உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது.