
தமிழ் சினிமாவில் ‘புரட்சித் தளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஷால் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கும் ‘மகுடம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தடம் பதிக்கும் அவர், தனது புதிய பயணம், அரசியல், நட்பு மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து மனம் திறந்து பேசிய நேர்காணலிலிருந்து…
நடிகர், தயாரிப்பாளர் எனப் பல வெற்றிகளுக்குப் பிறகு இப்போது இயக்குநர். இந்தப் புதிய அனுபவம் எப்படி இருக்கிறது?
“இயக்குநர் என்பது எனது 35 ஆண்டுக் கால கனவு. இந்தப் படத்தில் அது தற்செயலாக அமைந்தது. என்றாலும், 23 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கும் என்னைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ஒரு புதிய இயக்குநராகவே நான் களமிறங்குகிறேன். இந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மக்கள் என்னை இயக்குநராக ஏற்றுக்கொள்கிறார்களா என்பதே எனக்குப் பெரிய சவால்”
‘மகுடம்’ படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் வருகிறீர்கள். அந்தப் பாத்திரங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
“இந்தப் படத்தில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கும் கதாபாத்திரங்கள் உள்ளன. 60களில் தொடங்கி 2025 வரை கதை நகர்கிறது. ஒரு கேங்ஸ்டர், 90 களின் இளையராஜா ரசிகர் மற்றும் 2025-ன் மெடிக்கல் ரெப் என மூன்று வெவ்வேறு உடல்மொழி கொண்ட பாத்திரங்கள். இதில் வயதான தோற்றத்திற்காகப் போடப்பட்ட ப்ராஸ்தெடிக் (Prosthetic) மேக்கப் மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் என்னிடமிருந்தே வேலையை வாங்குவது கடினமாக இருந்தது.”
படத்தின் இயக்குநர் ஆரம்பத்தில் ரவி அரசு என அறிவிக்கப்பட்டு பின் ஏன் மாற்றம் நடந்தது?
“இயக்குநர் மாற்றம் நடந்ததுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதை கூறுகிறார்கள். ஆனால், அது எதுவும் உண்மை இல்லை. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படம் இது. அவர்கள் என்னை நம்பி மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள். அவர்களுக்கு நான் நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் சில விஷயங்கள் செட் ஆகவில்லை. என்னால் இதற்கு மேல் ரிஸ்க் எடுக்க முடியாது என்றுதான் இந்தப் படத்தை நானே இயக்குவதாக முடிவெடுத்தேன். கதை திரைக்கதை என எல்லாவற்றையுமே மாற்றி, நானே முழுப் பொறுப்பெடுத்து இந்த மகுடத்தை இயக்க ஆரம்பித்தேன்”
அரசியல் பக்கம் வருவோம். முதலமைச்சர் விஜய் மற்றும் உதயநிதி ஆகியோருடனான உங்கள் நட்பு மற்றும் சமீபத்திய அரசியல் சர்ச்சை பற்றி உங்கள் கருத்து?
“எனக்கு எல்லா முதலமைச்சர் களுடனும் நல்ல பழக்கம் இருந்தது. ஜெயலலிதா அம்மா, கலைஞர் சுருணாநிதி, ஸ்டாலின் அங்கிள் என எல்லோரோடும் பழகியுள்ளேன். ‘ஸ்டாலின் அங்கிள்’ என்றுதான் உரிமையோடு அழைப்பேன். காவிரி விவகாரத்தில் உதயநிதி அப்படிப் பேசியது தவறு. அரசியல் என்பது ஒரு ஸ்கிரிப்ட் போல இருக்கும்போது பேசுவது வேறு: யதார்த்தமாகப் பேசுவது வேறு. லயோலா கல்லூரியில் என்னுடன் படித்த தோழன் உதயநிதி; என்னுடைய சீனியர் முதல்வர் விஜய். ஒரு காலேஜ் சீனியராக மற்றொரு நண்பரைச் சிறைக்கு அனுப்புவார் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.”
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் நடிகர் சங்கக் கட்டடம் பற்றி உங்கள் கருத்து என்ன?
“நடிகர் சங்கக் கட்டடப் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. யார் யார் பெயரோ அந்தக் கல்வெட்டில் வரப்போகுது என்று நினைத்தேன். கடைசில பார்த்தா உங்க (விஜய்) பேருதான் வரப்போகுது. நடிகர் சங்கக் கட்டடத்தின் கல்வெட்டில் ஜோசப் விஜய் என்ற பெயர் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கப் போகிறது. விஜய்யை நான் இப்போதும் ‘டார்லிங்’ என்றுதான் அழைப்பேன். அவர் முதலமைச்சரான பிறகு, அவரிடம் “நான் உங்களுக்காக எழுதிய கதைகளை இனி நானே பயன்படுத்திக் கொள்கிறேன்’ என்று சிரித்துக்கொண்டே சொன்னேன். மேலும், விஜய் பெயரில் மூன்று பெண் குழந்தைகளின் கல்விச் செலவை நான் ஏற்றுள்ளேன்.”
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? சாய் தன்ஷிகாவுடன் திருமணம் எப்போது?
“நடிகர் சங்கக் கட்டடத்தைத் திறந்தபிறகே எங்கள் கல்யாணம் விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன். கடவுள் எனக்குக் கொடுத்த வரம் சாய் தன்ஷிகா வேறு யாராக இருந்தாலும் இவ்வளவு பொறுமையாகக் காத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால், சாய் தன்ஷிகா எனக்காக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னாவுடன் ‘புருஷன்’ படத்தில் நடித்து வருகிறேன். அந்தப் படம் ஜாலியாக வந்துகொண்டிருக்கிறது. ஒரு நடிகராக, தயாரிப்பாளராக ஜெயித்த நான், இயக்குநராகவும் மக்கள் மனதில் இடம் பிடிக்கக் காத்திருக்கிறேன்.”