பிறகு டைரக்ஷனில், ‘இன்று போய் நாளை வா’, ‘அந்த 7 நாட்கள்’, ‘தூறல் நின்னு போச்சு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘முந்தானை முடிச்சு’, என அடுத்தடுத்து ஹிட்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுத்தார். பாக்யராஜ், திரைக்கதை மன்னன் எனத் தனித்துக் கொண்டாடப்படுவதற்குச் சில முக்கியமான காரணங்கள் இருக்கின்றன. அவருடைய கதையின் மாந்தர்கள், அவர்கள் நிகழ்த்தும் விஷயங்கள், அவர்கள் பேசும் வசனங்கள் என அனைத்தும் எதார்த்தமானதாக இருக்கும். அப்படியான கதாபாத்திரங்களை நம் இயல்பு வாழ்க்கையிலும் பொருத்திப் பார்க்க முடியும். இப்படியான விஷயங்களை நகைச்சுவையோடு சேர்த்து, சுவாரஸ்யமான திரைமொழியில் அவர் தொடர்ந்து கொடுத்ததினாலேயே அவர் ‘திரைக்கதை மன்னன்’ எனக் கொண்டாடப்படுகிறார்.
நடிகை ஊர்வசியைத் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தது பாக்யராஜ்தான். இன்று கிளாசிக் படமாகக் கொண்டாடப்படும் ‘முந்தானை முடிச்சு’ படத்தில், ஊர்வசியை அறிமுகப்படுத்தினார். இப்படத்திற்கு முன்பு ஊர்வசி மலையாள சினிமாவில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் இதுதான். ஊர்வசியின் சகோதரியான கல்பனாவைத் தமிழில் அறிமுகப்படுத்தியதும் பாக்யராஜ்தான்.