இல்லதரசிகளுக்கு குட் நீயூஸ்…. விஜய் அறிவித்த அதிரடியான மூன்று அறிவிப்புகள் என்ன? – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடிய நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அன்னப்பூரணி சூப்பர் 6 திட்டம்

போர் சூழல் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் விஜய், பொங்கல் பண்டிகை முதல் ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். வரும் 2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும், இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். மேலும், எரிவாயு சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும்

பரந்தூர் விமான நிலையம் அமைக்கக் கூடாது எனப் போராடி வரும் மக்களுடன் தான் உறுதியாக நிற்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். நீண்ட நாட்களாக இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த அவர், விவசாயிகள் நாட்டின் முதுகெலும்பு என்றும், விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காகவே மக்கள் போராடி வருவதாகவும் கூறினார்.

கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் முதலமைச்சர் விஜய் நினைவுகூர்ந்தார்.

தொழில் வளர்ச்சிக்கும், அதற்கான விமான நிலையங்களின் பங்களிப்புக்கும் தான் முழு ஆதரவு அளிப்பதாகக் கூறிய விஜய், அதே நேரத்தில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்தத் திட்டம் குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குறைவான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் ஏற்கனவே தெரிவித்திருந்ததாக அவர் கூறினார்.

மக்கள் மத்தியில் அன்று அளித்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், புதிய விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

இதையடுத்து, ஏற்கனவே உறுதி அளித்தபடி பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகள் இந்த அரசால் கைவிடப்படும் என அறிவித்தார். மேலும், புதிய விமான நிலையம் அமைப்பதற்காக புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.

அக்டோபர் 2 முதல் ‘வெற்றிப்பயணம்’ திட்டம் விரிவாக்கம்

இதனிடையே, மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டமான ‘வெற்றிப்பயணம்’ திட்டம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதன்படி, மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் மேற்கொள்ளலாம். மேலும், மகளிருக்கான ‘வெற்றிப்பயணம்’ திட்டத்திற்கு வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாது என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். மேலும் இத்திட்டத்தின் மூலம் திருநர்,திருநங்கையர்களும் இந்த கட்டணமில்லா பயணம் திட்டத்தில் பயனடைலாம் என்றும் அறிவித்தார். சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் விஜய் வெளியிட்ட இந்த அறிவிப்புகள் அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *