“இல்லாத ஆலையை மூடச் சொன்னாரா?” – தவெக எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு! – Kumudam

Spread the love

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா முன்வைத்த கோரிக்கையும், அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

பேரவையில் எம்.எல்.ஏ தாஹிரா கோரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப்.3) காவல்துறை – தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கேள்வி – பதில் நேரத்தில் பேசிய ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா, “ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘ஜே.கே. டயர்ஸ்’ (JK Tyre) ஆலை இயங்கி வருகிறது. இரவெல்லாம் டயர்களை எரிய விடுவதால் அப்பகுதியில் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த ஆட்சியிலிருந்தே மக்கள் இதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். எனவே, சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த ஆலையை உடனடியாக இழுத்து மூட வேண்டும்” என வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி.கே. ராஜீவ், “இதுகுறித்த தகவல்களைத் தாருங்கள், இன்றே அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து அறிக்கை தருகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “இளைஞர்களின் வேலைவாய்ப்பையும் உறுதி செய்து, அதேநேரத்தில் சுற்றுச்சூழல் விதிகளையும் பின்பற்றி அந்த நிறுவனம் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இல்லாத ஆலைக்கு அமைச்சர்களின் பதிலா?

எம்.எல்.ஏ-வின் இந்தப் பேச்சுக்குப் பிறகு, உண்மையான நிலவரம் குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் ஆராயத் தொடங்கினர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஜே.கே. டயர்ஸ் நிறுவனத்தின் ஆலையே கிடையாது என்பதும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் தான் அந்த ஆலை உள்ளது என்பதும் தெரியவந்தது. அதேநேரம், ராணிப்பேட்டை சிப்காட்டில் எம்.ஆர்.எஃப் (MRF) டயர் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.

இல்லாத ஆலையை மூடக் கோரியதும், அதற்கு அமைச்சர்கள் பதிலளித்ததும் குறித்து பா.ஜ.க மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “ராணிப்பேட்டையில் ஜே.கே. டயர்ஸ் ஆலையே இல்லை! இல்லாத கம்பெனியை எப்படி மூடுவது? இதில் அதிர்ச்சி என்னவென்றால் இரு அமைச்சர்களும் இதற்குப் பதில் சொன்னதுதான்” என விமர்சித்துள்ளார்.

குழப்பத்திற்கு பின்னணியில் இருப்பது என்ன?

இது தொடர்பாக மேலதிக தகவல்கள் நாம் விசாரித்தபோது, ராணிப்பேட்டை மாவட்டம் வானாபடி அருகே காஞ்சனகிரி மலை அடிவாரத்தில் ‘ஏ.கே. டயர்ஸ்’ (AK TYRES) என்ற பழைய டயர்களை உருக்கும் ஆலை ஒன்று இயங்கி வருவது தெரியவந்துள்ளது. இது முகுந்தராயபுரம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே. முருகனுக்கு சொந்தமான ஆலை என்று கூறப்படுகிறது.

இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதும், பின்னர் அதிகாரிகள் சீல் வைத்துச் சீரமைக்கப்பட்ட பிறகு மீண்டும் இயங்கி வருவதும் தெரியவந்துள்ளது.

எனவே, எம்.எல்.ஏ தாஹிரா ‘ஏ.கே. டயர்ஸ்’ எனக் குறிப்பிடுவதற்குப் பதிலாகத் தவறுதலாக ‘ஜே.கே. டயர்ஸ்’ எனக் கூறிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நேரலையில் ஒளிபரப்பப்படும் பேரவை நிகழ்வுகளில் எம்.எல்.ஏ-க்கள் தரவுகளைத் தீர ஆராய்ந்து முன்வைப்பதே சரியாக இருக்கும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *