International
oi-Halley Karthik
தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா ஈரான் மீது சக்திவாய்ந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், இந்த தாக்குதலை ஈரான் நடத்தியது என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

இருந்தாலும், தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வேலையை அமெரிக்க செய்ய தொடங்கியிருக்கிறது. “ஈரானின் இந்தத் தாக்குதல் தேவையற்றது, ஆபத்தானது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல்” என்று அமெரிக்க தெரிவித்துள்ளது.
மேலும் இதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் பந்தர் அப்பாஸ் மற்றும் கெஷ்ம் தீவு பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதாகத் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
ஈரான் எண்ணெய் விற்பனை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை சலுகையை அமெரிக்கா உடனடியாக ரத்து செய்துள்ளது. கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியின் அங்காராவில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஈரானின் இத்தகைய செயல்களுக்கு கடுமையான விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஈரானின் எதிர்வினை
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும், பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் அமெரிக்க டாலரின் மதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. நிலைமை இப்படியே போனால், நிச்சயம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.