Business
-Vigneshkumar
டெல்லி: நேற்றைய தினம் பிரபல இந்திய டிரேடிங் நிறுவனம் ஒன்றின் வாடிக்கையாளர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக மெயில் வந்துள்ளது. இதை பார்த்தவுடன் முதலீட்டாளர்கள் பலரும் பதற்றமடைந்து, சந்தையில் கைவசம் இருந்த டிரேட்களை அவசர அவசரமாக முடித்துள்ளனர்.. இது நேற்று பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
இந்த காலத்தில் இளைஞர்கள் பலரும் டிரேட் மற்றும் முதலீட்டிற்காகப் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள். பெரும்பாலும் அவர்கள் ஆன்லைன் டிரேடிங் தளம் வாயிலாகவே முதலீடுகளைச் செய்கிறார்கள். அப்படி இந்தியாவில் உள்ள டாப் ஆன்லைன் டிரேடிங் நிறுவனங்களில் ஒன்றாக அப்ஸ்டாக்ஸ் இருக்கிறது.

மெயில்
இதற்கிடையே நேற்று மாலை அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு மெயில் போய் இருக்கிறது. அந்த மெயிலை பார்த்தவுடன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நொடி தலையே சுற்றிவிட்டது. பங்குச்சந்தை வர்த்தகத்தின் போது வந்த இந்த மெயில் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முடக்கம்
அதாவது நேற்று புதன்கிழமை பிற்பகலில் பல்வேறு வாடிக்கையாளர்களும், தங்களின் வர்த்தக கணக்குகள் அதாவது டிரேடிங் டிமாட் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக மெயில் வந்துள்ளது. அப்ஸ்டாக்ஸின் அதிகாரப்பூர்வ மெயில் ஐடியில் இருந்தே இந்த மெயில் வந்ததால் வாடிக்கையாளர்கள் ஒரு நொடி குழம்பிப் போனார்கள். அதில் கணக்கு தொடங்கப்பட்ட பிறகு கண்டறியப்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக வாடிக்கையாளர்களின் வர்த்தகக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மெயில் வந்த 30 நாட்களில் வர்த்தக மற்றும் டிமேட் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நஷ்டம்
இந்த மெயிலை பார்த்த முதலீட்டாளர்கள் பலரும் பதற்றமடைந்து, சந்தையில் கைவசம் இருந்த டிரேட்களை அவசர அவசரமாக முடித்துள்ளனர். முடக்கம் குறித்த மெயில் வந்ததால் சிலர் நஷ்டத்திற்கும் கூட தங்கள் டிரேட்களை முடித்தாக இணையத்தில் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். என்ன தான் சிக்கல் என்பதைப் பார்க்கப் பலரும் ட்விட்டருக்கு வந்துள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது ஏதோ தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இதுபோல அனைவருக்கும் மெயில் போய் இருக்கிறது.
இது குறித்து விளக்கமளித்த அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், “வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சல் முற்றிலும் எதிர்பாராதவிதமாகத் தவறுதலாக அனுப்பப்பட்டது” என்று ஒப்புக்கொண்டார். இந்த தவறை உணர்ந்தவுடன், முந்தைய மெயிலை புறக்கணிக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக மற்றொரு விளக்க மெயில் அனுப்பப்பட்டது. , இதனால் ஏற்பட்ட குழப்பங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்..
விளக்கம்
மேலும், தங்களின் செயல்பாடுகள் வழக்கம் போல் எந்தப் பாதிப்பும் இன்றி தொடர்வதாகவும், வாடிக்கையாளர்களின் பணம், முதலீடுகள், பங்குகள் என அனைத்தும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் உறுதியளித்தார். அதேநேரம் ஏன் இந்த தவறு நடந்ததால் இதனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என் குறித்து எந்தவொரு தகவலையும் அவர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை.
இதற்கிடையில், டிமேட் கணக்கு தொடங்கப்பட்ட பின்னர் இதுபோல கணக்கு திடீரென முடக்கப்படுவது மிகவும் அரிதான ஒன்று என்று மற்றொரு முன்னணி டிரேடிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் எகானிமை டைம்ஸ் ஊடகத்திற்கு விளக்கமளித்தார். பொதுவாக செபி போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் நேரடி உத்தரவின் பேரிலேயே கணக்குகள் முடக்கப்படும் என்றும் ஆடோமேஷன் பிராசசிஸ் நடந்த தவறு காரணமாகவே இந்த மெயில் அனுப்பப்பட்டு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.