உண்ணாவிரதத்தை கைவிட தயார்… சோனம் வாங்சுக் வெளியிட்ட கடிதம்! – Kumudam

Spread the love

சமீபத்தில் நீட் தேர்வு  வினாத்தாள் கசிவு ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  டெல்லி அரசு நீட் தேர்வு ஒன்றினை வைத்து மாணவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கின்றது என்று அதனை ரத்துச் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தும் வரும் நிலையில்  டெல்லியில் ஜந்தர் மந்தியில் சோனம் வாங்சுக்கும்  20 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றார்.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி  ஜனதா கட்சி இளைஞர்கள் கடந்த ஜுன் 20 முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில்  லடாக்கை சேர்ந்த கல்வியாளர் சோனம் வாங்சுக் கலந்து கொண்டு 20 நாட்களாக உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வந்தார். அவரை  நேற்று முன்தினம் (18.07.2026) போலீசாரால் வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லப்பட்டு சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வேண்டி அவரது மனைவி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இந்நிலையில் இன்று நாடாளுமன்றம் நோக்கி போராட்டக்காரர்கள் பேரணி நடத்தும் போது அங்கு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பேரணியில் ஈடுப்பட்டவர்களை போலீஸ் தடியடி நடத்தினர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ், மூத்த பாலிவுட் நடிகை சாபனா அஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும்  வலுக்கட்டயமாக போலீசாரால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சோனம் வாங்சுக் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் மறுத்து வருகிறார். இந்நிலையில் நான் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்றால் மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று  மத்தியஅரசு  நிறைவேற்றப்பட்டால் இன்றைய தினமே  நான் உண்ணாவிரதத்தை கைவிட தயார் என்று கூறியுள்ளார். ஒரு துண்டு காகிதத்தில் போலீஸ் கட்டுப்பாட்டை மீறி ரகசியமாக சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில்,

1.இந்தியக் கல்வி முறையில் அண்மையில் நடந்துள்ள தொடர் தோல்விகளுக்கும், குறிப்பாக நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்கும் மத்திய அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். அப்படி அரசு முறைப்படி பொறுப்பேற்று நடவடிக்கை எடுத்தால் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வேன்.

2.ஒருவேளை மத்திய அரசு அதற்கு மறுக்கும் பட்சத்தில், எனக்கும் சிஜேபி கட்சி தலைமைப் பொறுப்பாளர்களுக்கும் நாடாளுமன்றத்தின் வாயில் வரை சென்று எங்களது கோரிக்கைகளை நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி வழங்க வேண்டும். அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எங்களது கோரிக்கைகளை நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எழுப்புவோம் என்று நேரில் உறுதியளிக்க வேண்டும்.

3.என்னுடைய மோசமடைந்து வரும் உடல்நிலையோ அல்லது பிற காரணங்களோ எங்களை நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல அனுமதிக்கவில்லை என்றால், மதிப்பிற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நான் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனைக்கே நேரில் வந்து, கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்ற மேற்சொன்ன உறுதியை எனக்கு வழங்க வேண்டும்.

இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்குவதால், இந்த மூன்று நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டால், இன்றைய தினமே  நான் உண்ணாவிரதத்தை முறித்துக் கொள்ளத் தயாராக இருப்பதாக சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார். மேலும், சப்தர்ஜங் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டிருப்பதை ‘சட்டவிரோத காவல்’ என்று அவர் சாடியுள்ளார்.

தனது கடிதத்தின் முடிவில், “என்னுடைய நடமாடும் சுதந்திரம், பேச்சுரிமை மற்றும் அனைத்துத் தகவல் தொடர்பு வசதிகளும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையின் சட்டவிரோதக் காவலில் இருந்து…” என்று கையெழுத்திட்டு சோனம் வாங்சுக் தனது குறிப்பை நிறைவு செய்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *