உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்த எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹசன், நடுவர்களின் முடிவுகள் ஒருதலைபட்சமாக இருந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். “நாங்கள் ஏமாற்றப்பட்டோம், மெஸ்ஸியை போட்டியில் வைத்திருக்கவே இப்படிச் செய்யப்பட்டது” என்று அவர் கூறியுள்ளது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
செவ்வாயன்று நடந்த இந்த பரபரப்பான போட்டியில், எகிப்து அணி ஒரு கட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது. யாசர் இப்ராஹிமின் கோலைத் தொடர்ந்து, முதல் கோல் VAR முறையீட்டால் ரத்து செய்யப்பட்ட போதிலும், மொஸ்தஃபா ஸிகோ மீண்டும் ஒரு கோல் அடித்து எகிப்துக்கு வலுவான முன்னிலையைக் கொடுத்தார். இந்த நிலையில், அர்ஜென்டினா அணிக்கு முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அடித்த அந்த பெனால்டியை எகிப்து கோல்கீப்பர் மொஸ்தஃபா ஷோபீர் தடுத்து அசத்தினார்.

இருப்பினும், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினா அதன்பிறகு ஆக்ரோஷமாக விளையாடியது. கிறிஸ்டியன் ரொமேரோ முதல் கோலை அடிக்க, இந்தத் தொடரில் தனது 8-வது கோலைப் பதிவு செய்த மெஸ்ஸி, ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், கடைசி நிமிடத்தில் என்ஸோ பெர்னாண்டஸ் அடித்த கோலால் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹொசாம் ஹசன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். “இதை துரதிர்ஷ்டம் என்று சொல்லி நான் கடந்து செல்ல விரும்பவில்லை. நாங்கள் அப்பட்டமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் வெடித்தார்.
போட்டியின் தொடக்கத்தில் எகிப்து 1-0 என முன்னிலையில் இருந்தபோது, மொஸ்தஃபா ஸிகோ அடித்த ஒரு கோலை VAR தொழில்நுட்பத்தைக் காரணம் காட்டி நடுவர் ரத்து செய்தார். ஆட்டத்தின் தொடக்கத்தில் லிசாண்ட்ரோ மார்டினெஸ் மீது செய்யப்பட்ட ஃபவுலைக் காரணம் காட்டி அந்த கோல் மறுக்கப்பட்டது.

மேலும், அர்ஜென்டினா வெற்றி கோலை அடிப்பதற்குச் சற்று முன்பு, எகிப்து வீரர் ஹம்டி ஃபதியின் சட்டையை அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் இழுத்ததாகவும், அதற்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும் என்றும் எகிப்து தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், நடுவர் அதைக் கண்டுகொள்ளவில்லை, VAR சோதனையும் செய்யப்படவில்லை. இதைக் குறிப்பிட்ட ஹசன், “எங்களுக்கு மரியாதையோ, நேர்மையான ஆட்டமோ கிடைக்கவில்லை. ஃபவுல் செய்யப்பட்டது அப்பட்டமாகத் தெரிந்தும் VAR சோதனை கூட செய்யப்படவில்லை. இது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த அநீதியைக் கண்டிக்கும் வகையில், இனி இந்த உலகக்கோப்பைத் தொடரின் எந்தப் போட்டியையும் பார்க்கப்போவதில்லை என்றும் அவர் அறிவித்தார். “எனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, இந்த உலகக்கோப்பையின் மீதமுள்ள போட்டிகளை நான் பார்க்க மாட்டேன்,” என்றார்.

“ஒருவேளை அவர்கள் உலக சாம்பியன்களை போட்டியில் வைத்திருக்க விரும்பினார்களோ என்னவோ. ஒருவேளை மெஸ்ஸியை இந்தத் தொடரில் நீடிக்க வைக்க விரும்பியிருக்கலாம். கால்பந்தில் சில நேரங்களில் தொழில்நுட்பத்தைத் தாண்டி சில வெளிப்புற காரணிகளும் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலக சாம்பியன்களுக்கு எல்லா மட்டத்திலும் ஆதரவு கிடைத்துள்ளது,” என ஹசன் நேரடியாகவே குற்றம்சாட்டினார்.
மேலும், போட்டி மதியம் 12 மணிக்கு நடத்தப்பட்டதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். “போட்டி அட்டவணையைத் தயாரித்தவர்களுக்கு கால்பந்து பற்றி எதுவும் தெரியாது. மதிய உணவருந்தும் நேரத்தில் யாரும் கால்பந்து விளையாட மாட்டார்கள். வீரர்களுக்கு எப்போது உணவு கொடுப்பது? காலை 7.30 மணிக்கா? மைதானத்திலும், வெளியேயும் பல விஷயங்கள் கேள்விக்குறியாகவே உள்ளன,” என்று அவர் கூறினார்.