Tamilnadu
oi-Mani Singh S
செங்கல்பட்டு: மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல் பிரசாரத்துக்கு வீராணக்குன்னம் பகுதி கிராம மக்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு உண்டானது. இதுவரை என்ன செய்தீர்கள்.. இப்போது எங்களிடம் ஏன் வாக்கு கேட்க வருகிறீர்கள்.. உள்ளே வராதீங்க என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் கிராம மக்களை சமாதானம் செய்து வைத்ததை அடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மரகதம் குமரவேல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு ராஜினாமா செய்த மரகதம் குமரவேல் தற்போது தவெக சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். அவரது வேட்புமனு ஏற்கப்பட்டுள்ள நிலையில் இன்று அவர் பிரசாரத்திலும் ஈடுபட்டார். கிராமம் கிராமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரம் செய்ய எதிர்ப்பு
அதன்படி இன்று வீராணக்குன்னம் பகுதியில் அவர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கோவில் கொடை நடந்து வருவதால் இங்கு பிரசாரம் செய்ய வேண்டாம்.. உள்ளே வராதீங்க என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். எனினும் மரகதம் குமரவேலின் ஆதரவாளர்கள் அவர்களுடன் சமாதானம் பேசினர். தொடர்ந்து அங்குள்ள மக்கள் எங்கள் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கினர்.
குமரவேலை சூழ்ந்துகொண்ட கிராம மக்கள்
ஒரு தரப்பினர் மரகதம் குமரவேல் பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து கேள்வி மேல் கேள்விகளை எழுப்பினர். எங்கள் தொகுதிக்கு இதுவரை நீங்க என்ன செய்தீர்கள்.. ஒன்றுமே செய்யாமால் இப்போது மீண்டும் வந்து வாக்கு கேட்கிறீர்கள். இப்போது வந்தாலும் எங்களுக்கு என்ன செய்வீர்கள்? என கேள்வி எழுப்பி பிரசாரம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மரகதம் குமரவேல் ஆதரவாளர்கள் அவர்களை சமாதானம் செய்ய முயற்சித்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சமாதானம் செய்ய முயன்றபோது மரகதம் குமரவேல் கணவர் குமரவேலை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எந்த ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. கடந்த முறை கூட நிறைய இடங்களில் 10 கிலோ அரிசி கொடுத்தார்கள். ஆனால் இங்கு யாருக்கும் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பினர். இதையடுத்து அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மரகதம் குமரவேல் மற்ற கிராமங்களில் பிரசாரத்தை தொடர்ந்துள்ளார்.
5 முனை போட்டி
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜிமானா செய்த மரகதம் குமரவேல் தற்போது தவெக சார்பில் களமிறங்கியுள்ளார்.
திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் பரந்தாமனும், அதிமுக சார்பில் கணிதா சம்பத்தும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி சுகந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமனும் போட்டியிடுகின்றனர்.
முக்கிய தேதிகள்:
மனுக்கள் மீதான பரிசீலனை நாளை இன்று 17 ஆம் தேதி நடக்கிறது.
செப்டம்பர் 19 ஆம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்.
அக்டோபர் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.
அக்டோபர் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

