பிளஸ் டூ .. காலைல மைதானத்திற்கு பாஸ்கட் பால் விளையாட போகும்போது.. அருகில் உள்ள சின்ன தேநீர் கடையில் பூஸ்ட் சாப்பிடுவது உண்டு…. அப்பொழுது அந்தக் கடையில் இருக்கும் ஸ்பீக்கரில் இந்த படத்தின் பாடல்கள் ஒலிக்கும்.. குறிப்பாக
‘ஆனால் ஒரு சந்திரனைப் பார்த்து தாமரை மொட்டு அவசரப்பட்டு அவிழ்ந்து விடுகிறது ..சந்திரன் சபைக்கு வருகிறது .தாமரை செய்த குற்றத்திற்கு சந்திரனுக்கு தண்டனையா? ன்னு கம்பீரமான குரலில் வைரமுத்து பேச பின்னாலேயே ஒலிக்கும் ‘ராசாவே உன்னை நம்பி’ பாடல்…

கிரவுண்டுக்கு போறதை கூட மறந்துவிட்டு இந்தப் பாடலை ரசித்து கேட்டது கண் முன்னே நிழலாடுகிறது.
படத்தில் ஒவ்வொரு பாடலிலும் மண்வாசனை பொங்கி வழியும்.
ஆற்றில் மிதக்கும் தனது மனைவியின் பிணத்தைப் பார்த்தவுடன் புல்லாங்குழலை தூக்கி எறியும் அந்த காட்சியில்.. புல்லாங்குழலின் மெல்லிய வாசிப்பில் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை உணரலாம்.
‘சாமி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’… மறக்குமா இந்த வசனம்.
குயிலின் வார்த்தைகளும், அவரது அண்மையும் தான் ஆறுதலாய் நினைக்கும் மலைச்சாமி.
மரணப்படுக்கையில் கிடக்கும் போது குயில் வந்ததும் அவரது முகத்தை பார்க்கும் பார்வை ஒன்று போதும்… இதுவரை மனதில் இருந்த அன்பையும் காதலையும் குயிலுக்கு உணர்த்தும் அந்த பார்வை அந்த முகபாவம்… சிவாஜி மறைந்து மலைச் சாமியாகவே… திரையில் தெரிவார்.
ராதா கொலை செய்தது யார்ன்னு எட்டிப் பார்க்கும் வடிவுக்கரசி யின் நெற்றியில் தண்ணீர் பட்டு பொட்டு கரையும். வடிவுக்கரசியின் காதலன் சத்யராஜ் வடிவுக்கரசியின் மகளுக்கு அப்பாஅவர்தான் என்பதையும்
இந்த ஒரே ஒரு ஷாட்டில் எந்த ஒரு வசனமும் இல்லாமல் நமக்கு உணர்த்தி விடுவார் இயக்குனர்.
இப்படி படத்தில் ஒவ்வொரு காட்சியையும் மிக மிக நேர்த்தியாக கவித்துவமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்தப் படம் பரிணாம வளர்ச்சி அடைந்த ஒரு காதல் கதை…
எத்தனை யுகங்கள் ஆனாலும் கூடிக் கொண்டே இருக்கும் முதல் மரியாதைக்கான ‘மரியாதை’.
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.