மகாராஷ்டிராவில் சமீபத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் இருந்து 6 எம்.பி.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவிற்கு தாவினர். அவர்களுக்கு மாநில அரசு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுத்து இருக்கிறது. 6 எம்.பி.க்களுக்கு எதிராக அவர்களது தொகுதியில் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்கிறது. அதுபோன்று போராட்டம் நடத்துபவர்களை அணி மாறிய எம்.பி.க்களில் ஒருவரான சஞ்சய் தினா பாட்டீல் மிரட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் போராட்டக்காரர்களை பார்த்து, தனக்கு எதிராக போராட்டம் நடத்தினால் சுடுகாடு அல்லது மருத்துவமனைக்குத்தான் செல்வீர்கள் என்று மிரட்டி இருக்கிறார். அவரது மிரட்டலை தொடர்ந்து உத்தவ் தாக்கரே கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவுத் அவரை கைது செய்யவேண்டும் என்று போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அப்புகாரில், சஞ்சய் தினா பாட்டீல் தனக்கு எதிராகப் போராடும் பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும், அவரை எதிர்ப்பதற்கு முன் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு எடுக்குமாறு கூறியதாகவும் ராவுத் தனது புகாரில் குற்றம் சாட்டினார்.
மேலும் ஐந்து பேரைக் கொலை செய்ததாக பாட்டீல் கூறியதாகவும் சஞ்சய் ராவுத் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட அந்த 5 பேர் யார், எப்போது கொல்லப்பட்டனர், எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சஞ்சய் ராவுத் தனது புகாரில் கோரினார். பாட்டீல் அவ்வாறு குறிப்பிட்டு இருந்தால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். போராட்டக்காரர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி அவர்களது வீடுகளுக்குள் நுழையப் போவதாகவும் பாட்டீல் மிரட்டியுள்ளார்.
ஒரு எம்.பி.யிடமிருந்து வரும் இத்தகைய அச்சுறுத்தல் தீவிரமான கவலையாக இருந்தது. தீவிரவாத தடுப்பு படையின் உதவியோடு சஞ்சய் தினா பாட்டீலை தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்றும் கோரினார். போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது பத்திரிகையாளர்களையும் சஞ்சய் தினா பாட்டீல் மிரட்டினார். இதற்காக பின்னர் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
சஞ்சய் தினா பாட்டீலின் மிரட்டல் குறித்து ஆதித்ய தாக்கரே அளித்த பேட்டியில்,”அவருக்கு (பாட்டீலுக்கு) தைரியம் இருந்தால், அவர் எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வேண்டும்”என்று தெரிவித்தார்.