என்னது… சட்டமன்றத்தில் முதல்வர் பேசமாட்டாரா? – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எதிர்க்கட்சிகள் தரப்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

முதல்முறையாக அரசியல் களத்தில் பயணித்து வரும் முதலமைச்சர் விஜய், சட்டசபையில் எதிர்க்கட்சிகள் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு இனிமேல் நேரடியாக பதிலளிக்காமல், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களே மட்டுமே பதிலளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் அரசை கடுமையாக விமர்சித்தன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மின்வெட்டு, சட்டம்-ஒழுங்கு, நிர்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவற்றுக்கு நேரடியாக விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக திமுகவை மட்டுமே விமர்சிக்கும் வகையிலும், திரைப்பட வசனங்களைப் போன்ற பேச்சுகளையே அதிகம் பயன்படுத்துகிறார் என்ற விமர்சனமும் அரசியல் வட்டாரங்களில் எழுகிறது.

அதேபோல், கரூர் சம்பவத்திற்குப் பிறகு அங்கு சென்ற முதலமைச்சர் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை விட திமுகவை விமர்சிக்கும் வகையிலேயே தனது பேச்சு அமைந்ததாகவும், மக்கள் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும், முதலமைச்சராக பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரை செய்தியாளர்களை நேரடியாக சந்தித்து விரிவான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை என்பதை அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டி வரும் நிலையில், இந்தச் சூழலில்தான், சட்டசபையில் அமைச்சர்களே அரசின் சார்பில் பதிலளிப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடைமுறை ஒரு வகையில் முதலமைச்சருக்கு அரசியல் ரீதியாக சாதகமாக அமையலாம் என்று சிலர் கருதினாலும், மறுபுறம் எதிர்க்கட்சிகள் எழுப்பும் முக்கிய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதிலளிக்காமல் அமைச்சர்கள் மட்டும் பதிலளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்ற கருத்தும் எதிர்க்கட்சிகள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில், இனி சட்டசபையில் முதலமைச்சர் விஜய் நேரடியாக பேசாமல், அமைச்சர்களே அரசின் சார்பில் பதிலளிப்பார்கள் என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவி வருவது மாநில அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இதுகுறித்து அரசு தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *