முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, உங்கள் கருத்தை பேசுவது சண்டை அல்ல. உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது தவறு அல்ல. ஆனால் அதை எப்படி சொல்லுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். நீண்ட நாள் அமைதியாக இருந்த நீங்கள் திடீரென்று ரியாக்ட் செய்தால் அது பிரச்னையாக மாறலாம்.
‘ முடிவு எடுக்கும் முன் என்னைக் கேட்கவே மாட்டீங்களா?’ என்று கேட்பது ஒரு குற்றச்சாட்டு போன்று தோன்றலாம்.
அதற்குப் பதிலாக, ‘இந்த விஷயத்தில் என் கருத்தையும் சேர்த்துக்கிட்டா நல்லா இருக்கும்’ என்று உங்கள் கருத்தை மெதுவாக வெளிப்படுத்த தொடங்கலாம். இந்த மாதிரியான சிறிய மாற்றங்களே பெரிய மாற்றங்களுக்கு ஆரம்பமாக அமையும்.
அதே நேரத்தில், ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. சிறிய விஷயங்களிலிருந்து ஆரம்பிக்கலாம். ‘நாளைக்கு நான் இதைச் சமைக்கிறேன்’, ‘இந்த வாரம் நான் என் வீட்டுக்கு போயிட்டு வரணும்’ இப்படி மெதுவாக உங்கள் முடிவுகளை வெளிப்படுத்த ஆரம்பியுங்கள்.
இது,’ நீங்களும் முடிவு எடுக்கும் இடத்தில் உள்ளவர்’ என்று நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு தெளிவான சிக்னலை கொடுக்கும் முயற்சியாக இருக்கும். இந்தப் பயணத்தில் உங்கள் கணவரின் பங்கு மிகவும் முக்கியமானது. அவரிடம் பேசும்போது, குற்றம் சாட்டாமல், உங்கள் உணர்வுகளைப் பகிருங்கள்.
இதில் மற்றொரு முக்கியமான விஷயம் உங்களின் கரியர். ‘பிறகு பார்க்கலாம்’ என்று தொடர்ந்து தள்ளிப்போட்டால், வேலைக்குச் செல்லும் சூழலே இல்லாமல் போய்விடும். வேலைக்குப் போக நினைப்பது சுயநலமான முடிவு அல்ல. எனவே அதில் உங்களின் உறுதியான கருத்தைப் பதிவு செய்வது அவசியம்.
ஒரு குடும்பத்தில் இருக்கிறீர்கள் என்பதற்காக, உங்கள் குரல் இல்லாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் கருத்து, உங்கள் விருப்பம், உங்கள் முடிவு இவையும் அந்த குடும்பத்தின் ஒரு பகுதிதான்.
மாற்றம் ஒரே நாளில் வராது. ஆனால், நீங்கள் உங்கள் கருத்தை மெதுவாக பேச ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை மீண்டும் உங்கள் கையில் வர ஆரம்பிக்கும்” என்று விரிவாக ஆலோசனைகள் வழங்கினார்.