வேளாண்மை தனிநிதிநிலை அறிக்கை தொடர்பாக, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்துக்கேட்பு கூட்டம், வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் பேசியதாவது, “விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும், அவர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், இயற்கை வேளாண்மை, இயந்திர பயன்பாடு மற்றும் சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் விலைப்பாதுகாப்பு, மேம்பட்ட தரத்தில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு திட்டங்களையும் வகுத்து மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதி சேர்க்கும் வகையில் அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, அதற்கேற்ப வேளாண்மை நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட உள்ளது.

முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின்பேரில், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களுக்கு ரூ.134 கோடியே 83 லட்சம் மதிப்பிலான குறுவை சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடுமையான நிதி நெருக்கடியிலும், ஆட்சிப்பொறுப்பேற்ற 40 நாட்களில் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலித்து 14,43,000 விவசாயிகளுக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி வரை பயிர்கடன் தள்ளுபடி செய்துள்ளார். தோட்டக்கலைப் பயிர்களான காய்கறிகள், பழங்கள், மலர்கள் வாயிலாக விவசாயிகள் தொடர் உயர் வருமானம் பெற இயலும் என்பதால், அவற்றின் பரப்பு விரிவாக்கத்துக்கு அதிக ஊக்கம் அளிக்கப்படும்.
பயிர்க்காப்பீட்டினைப் பொறுத்தவரையில், தற்போது நிலவும் `எல் நினோ’ நிகழ்வின் தாக்கத்தால் குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு, முதலமைச்சர் உத்தரவின்படி, ரூ.648 கோடி திட்ட மதிப்பீட்டில் `பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள், வங்கிகள் அல்லது பொதுசேவை மையங்கள் வாயிலாக, இந்த மாதம் 31-ம் தேதிக்குள் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.

குறைந்துவரும் வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும், வேளாண்மைத்தொழிலை இயந்திரமயமாக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வேளாண் விளைபொருள்களுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, சந்தை விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளால் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், குளிர்பதனக் கிடங்குகள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் இதர அறுவடைக்குப் பிந்தைய உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு தொடர்ந்து உருவாக்கும். விவசாயிகளின் தேவைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் களத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை நேரடியாக அறிந்து, அவற்றுக்கு நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கத்தில், பல்வேறு திட்டங்களை இந்த அரசு வகுத்திடும் என உறுதியளிக்கிறேன்’’ என்றார்.