"ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறீர்கள்" – விஜய்யை விமர்சிக்கும் சிபிஎம் பாலகிருஷ்ணன்; பின்னணி என்ன?

Spread the love

இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் குறிவைத்து அரசு எந்திரங்களையும், கல்லூரி இயக்குநரையும் தவறாகப் பயன்படுத்தும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “தமிழ்நாடு முழுக்க இருக்கும் காவல்துறை தலைமைக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறது. அதில், இடதுசாரி மாணவர் அமைப்புகள் மற்றும் கரப்பான் பூச்சி அமைப்பினர் நடத்தும் போராட்டங்களை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் கண்காணிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

அத்துடன் அது தொடர்பான அறிக்கையை உடனடியாக தலைமைச் செயலாளருக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இப்படியான ஒரு சுற்றறிக்கை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட வெளியானது கிடையாது. 80 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாணவர்களின் போராட்டங்களைக் கண்காணிக்க, ஒடுக்க இப்படி ஒரு சுற்றறிக்கை வெளியானது கிடையாது.

அப்படி இருக்கும்போது தற்போது மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எடுக்கப்படும் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கத்தை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுற்றறிக்கை மூலம் நிறைவேற்றி வருகின்றனர். தலைமைச் செயலாளர் இப்படி ஒரு அறிக்கை கேட்டது தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தெரியாதா ?

தமிழ்நாட்டில் தற்போது நடப்பது த.வெ.க-வின் ஆட்சியா… அல்லது அதிகாரிகளின் ஆட்சியா ? இதுகுறித்து இன்னும் முதலமைச்சர் விஜய் ஏன் வாய் திறக்கவில்லை ? இது ஒரு வரலாற்றுப் பிழை. இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்ட தலைமைச் செயலாளரை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். இப்படி எத்தனை அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் வந்தாலும் அனைத்தையும் நாங்கள் தவிடுபொடியாக்குவோம்.

முதலமைச்சர் இன்னும் வாய் திறக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் ? வாய் திறவா முதலமைச்சரா அவர் ? இதை அரசியல் தவறாகக் கருதுகிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும். இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன்தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது.

பாலகிருஷ்ணன்
பாலகிருஷ்ணன்

இடதுசாரிகள் ஆதரவை விலக்கிக் கொண்டால் இந்த ஆட்சி இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது. இடதுசாரிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நீங்கள் அவர்களையே கண்காணிப்பது, ஏறிவந்த ஏணியை எட்டி உதைப்பதற்குச் சமம். அப்படித்தான் செய்கிறீர்களா?

இடதுசாரிகளையும் மாணவர்களையும் ஒடுக்குவதற்குத்தான் இந்த அரசு இருக்கிறதா ? இதே நிலை நீடித்தால் இந்த அரசை ஆதரிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

அதனால் உடனடியாக தலைமைச் செயலாளரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும். தமிழக முதலமைச்சர் விஜய் உடனே பகிரங்க மன்னிப்பைக் கேட்க வேண்டும். சுற்றறிக்கை தொடர்பாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழகம் முழுக்க எங்கள் போராட்டம் தொடரும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *