ஹாலிவுட் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் ‘தி ஒடிஸி’ திரைப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தை ஐமேக்ஸ் திரைக்காகவே பிரத்யேகமாகப் படம் பிடித்திருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். இவரும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.
தன்னுடைய ‘தி டார்க் நைட்’ திரைப்படம் தொடங்கி, ஒவ்வொரு படங்களிலும் ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்தி சில பகுதிகளைப் படமாக்கிவிடுவார்.
தற்போது இந்த ‘தி ஒடிஸி’ படத்தை முழுமையாகவே ஐமேக்ஸ் ஃபிலிம் கேமராவைப் பயன்படுத்திப் படமாக்கியிருக்கிறார். இந்தக் கேமராவை முழுமையாகப் பயன்படுத்திப் படம்பிடிக்கப்பட்டிருக்கும் முதல் திரைப்படமும் இதுதான்.

ஐமேக்ஸ் ஃபிலிம் ரோல்களை எப்படி காட்சிகளாகக் கொண்டு வந்தார்கள் என்பதை இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் காணொளியின் மூலமாக விவரித்திருக்கிறார். அவர், “படப்பிடிப்புத் தளத்திலிருந்து ஐமேக்ஸ் ஃபிலிமை நாங்கள் லேபுக்குக் கொண்டுச் செல்வோம். அப்படி லேபுக்கு வந்ததும், அது பிராசஸர் (Processor), டெவலப்பர் (Developer) மற்றும் ஃபிக்ஸர் (Fixer) ஆகியவற்றின் வழியாகச் செலுத்தப்படும்.
அதன்பின் காயவைக்கும் (Drying process) முறைக்கு உட்படுத்தப்படும். அதற்குப் பிறகு, தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில், எடிட்டிங்கிற்கு கொண்டுச் செல்வோம்.
எங்களுக்காக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அந்த ஃபிலிம் சுருள்களை எடுத்து, டிஜிட்டல் முறையில் எடிட் செய்வோம்.
எடிட்டிங்கில் கட் செய்ய வேண்டிய வேலைகள் முழுமையாக முடிந்ததும், கணினியிலிருந்து சில எண்களின் பட்டியல் எங்களுக்குக் கிடைக்கும்.
அந்த எண்கள், நாங்கள் படம்பிடித்த ஃபிலிமின் ஓரங்களில் இருக்கும் எண்களோடு ஒத்துப்போகக்கூடியவை. அந்த எண்களின் பட்டியலை மீண்டும் லேபுக்கு அனுப்புவோம்.
அவர்கள் நெகட்டிவைக் கைகளால் நேரடியாக வெட்டுவார்கள். பின்னர் அதை ஒன்றாக ஒட்டுவார்கள். அதன்பின்பு, தகுந்த கலர் கரெக்ஷன்களுடன் அது ஒரு பாசிட்டிவ் பிரின்ட்டாக அச்சிடப்படும்.

அந்தப் பாசிட்டிவ் பிரின்ட்டுகள் நேரடியாகவே ஐமேக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்படும்.
திரையரங்குகளில் ஒரிஜினல் நெகட்டிவிலிருந்து உருவாக்கப்பட்ட ‘ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் பிரின்ட்’ (First generation print) திரையிடப்படுவதால், நாங்கள் அதை எப்படிப் படம்பிடித்தோமோ, அதே தரத்தில் பார்வையாளர்கள் அப்படியே அமர்ந்து பார்க்க முடியும்.
அதாவது, ஐமேக்ஸில் படம்பிடிக்கப்பட்டு, ஐமேக்ஸ் வடிவத்திற்கு மாற்றப்பட்டு, ஐமேக்ஸிலேயே காண்பிக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க மனித உழைப்பால் நடக்கும் ஒரு செயல்முறை. இதில் ஏராளமான மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறியிருக்கிறார்.