அமெரிக்க கால்பந்து வீரர் ஃபோலாரின் பலோகன் உலகக் கோப்பை போட்டியில் வாங்கிய ஒரு ரெட் கார்டு, அவரது அணிக்கு தற்காலிக பின்னடைவைக் கொடுத்தாலும், ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்டாக மாறியுள்ளது.
பிரபல பீட்சா நிறுவனமான டோமினோஸ், இந்த ரெட் கார்டால் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட இலவச பீட்சாக்களை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இது கால்பந்து ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
திட்டம் போட்ட டோமினோஸ்!
இந்த அறிவிப்பு திடீரென வந்தது அல்ல. 2026 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே, டோமினோஸ் நிறுவனம் ஒரு வித்தியாசமான விளம்பர சலுகையை அறிவித்திருந்தது.
அதாவது, “அமெரிக்க தேசிய அணியின் வீரர் யாராவது போட்டியில் ரெட் கார்டு பெற்றால், ரசிகர்களின் சோகத்தைப் போக்க “$1 மில்லியன் மதிப்புள்ள எமர்ஜென்சி பீட்சாக்கள்’ இலவசமாக வழங்கப்படும்” என மே மாதமே உறுதியளித்திருந்தது.
தற்போது போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவுக்கு எதிரான போட்டியில் பலோகன் ரெட் கார்டு பெற்றதால், அந்த வாக்குறுதி நிறைவேறும் தருணம் வந்துவிட்டது.
ரெட் கார்டும், சரித்திர வெற்றியும்!
பொதுவாக, ஒரு முக்கிய வீரர் ரெட் கார்டு பெற்று வெளியேறினால், அது அணிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், புதன்கிழமை நடந்த இந்த நாக்-அவுட் போட்டியில் அப்படி நடக்கவில்லை. போட்டியின் இரண்டாம் பாதியில் பலோகன் வெளியேற்றப்பட்ட பிறகும், அமெரிக்க அணி மனம் தளரவில்லை.
82-வது நிமிடத்தில் மாலிக் டில்மேன் அடித்த ஒரு அற்புதமான ஃப்ரீ-கிக் கோலால், அமெரிக்கா வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் அமெரிக்கா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து, அடுத்த சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 16) முன்னேறியுள்ளது. அணியின் வெற்றியும், இலவச பீட்சா அறிவிப்பும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.