Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா முதல்முறையாக துணைக் கேப்டன் பொறுப்புக்கு ஏற்றவாறு விளையாடி இருக்கிறார். பேட்டிங்கில் 29 பந்துகளில் 60 ரன்களை விளாசிய நிலையில், பவுலிங்கில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது. இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 44 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 81 ரன்களையும், திலக் வர்மா 29 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட 60 ரன்களையும் சேர்த்தார்.

இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.5 ஓவர்களில் 129 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணிக்காக பவுலிங்கில் அபிஷேக் சர்மா 3 விக்கெட்டுகளையும், பிரின்ஸ் யாதவ் மற்றும் யாஷ் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதேபோல் ரவி பிஷ்னாய், சிவம் துபே மற்றும் திலக் வர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தப் போட்டியில் இஷான் கிஷன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டாலும், திலக் வர்மாவின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் திலக் வர்மா துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது முதலே திலக் வர்மா பேட்டிங்கில் எந்தவித பங்களிப்பையும் பெரியளவில் அளிக்கவில்லை.
இதனால் திலக் வர்மாவுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு கொடுத்ததே தவறு என்று ரசிகர்கள் சாடி வந்தனர். இப்படியான சூழலில் திலக் வர்மா பேட்டிங், பவுலிங்கில் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். 10வது ஓவரிலேயே பேட்டிங் செய்ய களமிறங்கிய திலக் வர்மா, தேவைக்கேற்ப அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் பொறுப்பையும் சேர்த்தே ஏற்றுக் கொண்டார்.
அவரின் கடைசி நேர அதிரடி காரணமாகவே இந்திய அணி 200 ரன்களை எளிதாக கடந்தது. இதேபோல் திலக் வர்மா கன்சிஸ்டன்சியுடன் செயல்படும் பட்சத்தில் அவருக்கு துணைக் கேப்டன் பொறுப்பு கொடுத்தது சரி என்று பார்க்கப்படும். இதனால் திலக் வர்மா ஒவ்வொரு போட்டியிலும் 100% உழைப்பை கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.