திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஓவரூர் கிராமத்தை சேர்ந்த வீரராகவன் – வனிதா தம்பதியினரின் இரட்டை மகள்கள் கார்த்திகா மற்றும் கீர்த்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளனர்.
பிறந்தது முதல் பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்த இவர்கள், கல்வியிலும் ஒன்றாக பயணம் செய்து வந்துள்ளனர். இருவரும் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு உதவி பெறும் புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தனர்.
தமிழக அரசின் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் ஆசியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் தேர்வு முடிவுகளை கண்டு மகிழ்ந்தனர்.
ஒற்றை பிள்ளை என்றாலே தேர்வு முடிவு அறிய எதிர்ப்பார்ப்பு பதட்டமும் அதிகம்தான். அதிலும் இரட்டையர்கள் என்றால் சொல்லாவா வேண்டும். மிகுந்த படபடப்பும் அதீத எதிர்ப்பார்ப்பும் ஓவரூரில் இவர்களின் குடும்பத்திலும் நிலவியது.
குடும்பத்தினருடன் தேர்வு முடிவுகளை பார்த்த இரட்டை சகோதரிகளான கார்த்திகா மற்றும் கீர்த்திகாவுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாகவே இருந்தது தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றது.