
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் யூடியூபர் பிரபலமான சூர்யா தேவி இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் எனக்கு நீண்டகால நண்பர். கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது தங்கையின் திருமண செலவிற்காக ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் தேவைப்படுவதாகவும், மூன்று மாதங்களுக்குள் திருப்பித் தருவதாகவும் கூறி என்னிடம் பணம் பெற்றார். அந்த தொகையை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நேரடியாக வழங்கினேன்.
பின்னர் மூன்று மாதங்கள் கடந்தும் பணத்தை திருப்பித் தராமல் பல்வேறு காரணங்களை கூறி காலதாமதப்படுத்தி வந்தார். கொரோனா காலகட்டத்திற்குப் பிறகும் பலமுறை கேட்டபோதும் பணத்தை வழங்கவில்லை. இதற்கிடையில் 2023-ம் ஆண்டு அவர் வேறு ஒரு வழக்கில் சிறையில் இருந்ததாக தெரிந்தது. பின்னர் கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் மீண்டும் பணத்தை கேட்டபோது, 2026 மே 22-ம் தேதி மதுரையில் தனியார் திருமண மண்டபத்தில் ஒரு எக்ஸ்போ நடப்பதாகவும் அதில் வந்து என்னை சந்திக்குமாறு கூறினார்.
நான் நேரில் சென்றபோது, பணத்தை வழங்குவதற்கு பதிலாக என்னை அவமதிக்கும் வகையில் பேசியதுடன், அங்கு இருந்த சிலர் என்னை மிரட்டி தாக்கியதாகவும், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்ததாகவும்” சூர்யா தேவி புகாரில் தெரிவித்துள்ளார்.மேலும், தன்னிடம் பெற்ற ரூ.2.10 லட்சத்தை இதுவரை திருப்பி வழங்காமல் ஏமாற்றியதுடன், தற்போது மிரட்டலும் விடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள சூர்யா தேவி.
நாஞ்சில் விஜயன் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், வி.ஜே. வைஷு தொடர்பான விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டபோது, அவரை “ஆப் செய்ய முடியுமா” என நாஞ்சில் விஜயன் தன்னிடம் கேட்டதாகவும், அப்போது தானே அவருக்கு உதவி செய்ததாகவும் சூர்யா தேவி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.