தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கடலூர் மாநகராட்சியில் முதல் கூட்டம் நேற்று நடந்தது. புதிய ஆணையர் கிஷன்குமார் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்திற்கு தி.மு.க-வைச் சேர்ந்த மேயர் சுந்தரி தலைமை தாங்கினார்.
கடலூர் மாநகராட்சியில் தி.மு.க-வுக்கு 27 கவுன்சிலர்களும், அ.தி.மு.க-வுக்கு ஆறு கவுன்சிலர்களும், வி.சி.க.வு-க்கு மூன்று கவுன்சிலர்களும், காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பா.ம.க-வுக்கு தலா ஒரு கவுன்சிலர்களும் இருக்கின்றனர். இவர்களுடன் மூன்று சுயேச்சை கவுன்சிலர்களும் இருக்கின்றனர். மாநகராட்சியின் அலுவலகக் கூட்ட அரங்கில் மேயர் இருக்கைக்குப் பின் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படம் அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக முதல்வர் விஜய்யின் படம் சிறிய அளவில் மாட்டப்பட்டது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் `ஸ்டாலின் வாழ்க… ஸ்டாலின் வாழ்க’ என்று கூறிக் கொண்டு அரங்கிற்குள் வந்த திமுக கவுன்சிலர்கள், `ஸ்டாலின் படத்தை எப்படி அகற்றலாம்?’ என்று கோஷம் எழுப்பினர்.
அத்துடன், அகற்றப்பட்ட ஸ்டாலினின் புகைப்படத்தை மீண்டும் மேயர் இருக்கைக்குப் பின்னால் மாட்டினர். அவர்களையடுத்து `எடப்பாடி அவர்கள் வாழ்க’ என்று கோஷம் போட்ட அ.தி.மு.க கவுன்சிலர்கள், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை மாட்டினர்.
தொடர்ந்து பா.ம.க கவுன்சிலர் சரவணன், `எங்க தலைவரோட படத்தை நானும் வைப்பேன்’ என்று சொல்லி அன்புமணியின் ஸ்டிக்கரை ஒட்டினார். அப்போது, `அன்புமணி முன்னாள் முதல்வரா? அவர் படத்தை எப்படி மாநகராட்சி அரங்கில் ஒட்டலாம்?’ என்று வாக்குவாதம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து வி.சி.க கவுன்சிலர்கள் அம்பேத்கரின் படத்தை மாட்டினர். அதனால் அங்கு ஏற்பட்ட வாக்குவாதங்களைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க தலைவர் அன்புமணியின் படங்களை தி.மு.க கவுன்சிலர்கள் அகற்றினர். அதனால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க, பா.ம.க கவுன்சிலர்களிடையே முற்றிய வாக்குவாதம், கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது.

உடனே சுதாரித்துக் கொண்ட மேயர் சுந்தரி, “இதுதான் முதல் கூட்டம். இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ள ஏன் இப்படிப் பண்றீங்க?’ அனுமதியின்றி கூட்ட அரங்கத்திற்குள் ஏன் வந்தீர்கள் ? அனைவரும் உடனே வெளியேறுங்கள்” என்று உத்தரவிட்டார்.
அத்துடன், முன்னாள் முதல்வர் ஸ்டாலினின் படத்தை மட்டும் விட்டுவிட்டு அனைத்துப் படங்களையும் அகற்றுமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார் மேயர் சுந்தரி. அதேபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அல்லது எடப்பாடி பழனிசாமி இருவரில் ஒருவரது படம்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியதால், ஜெயலலிதா படம் மட்டும் வைக்கப்பட்டது. இந்தக் களேபரத்தால் அங்கிருந்து வெளியேறிய ஆணையர் கிஷன் குமார், சூழல் அமைதியானதும்தான் திரும்பி வந்தார்.