'கடுமையான மன உளைச்சல்' – 'த்ரிஷ்யம் 3' படத்தினால் இடுக்கியைச் சேர்ந்தவருக்கு நேர்ந்த சிக்கல்!

Spread the love

மோகன்லால் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் இயக்குநர் ஜீத்து ஜோசப் ஆகியோருக்கு எதிராக இடுக்கியைச் சேர்ந்த ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு காரின் பதிவு எண், தன் சொந்த வாகனத்தின் எண் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

'த்ரிஷ்யம்'
‘த்ரிஷ்யம்’

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் என்ற விவசாயி, மூணார் காவல் அதிகாரிடம் இந்தப் புகாரை அளித்திருக்கிறார்.

அவர் கொடுத்துள்ள புகாரில், “படத்தில் மோகன்லால் பயன்படுத்தும் காரில், என்னுடைய சொந்த வாகனத்தின் பதிவு எண் எனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

திரையில் இந்த எண் தொடர்ந்து காட்டப்படுவதால், எனக்குத் தனிப்பட்ட முறையிலும் சட்ட ரீதியாகவும் தேவையற்ற சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எனது வாகன எண் வரும் காட்சிகளைப் படத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்,” என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்துப் பேசியுள்ள ராஜீவ், “படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், படத்தைப் பார்த்தவர்கள் பலரும் என் காரை ‘திரிஷ்யம் கார்’ என்று அடையாளப்படுத்துகிறார்கள்.

என்னை ‘திரிஷ்யம் ராஜீவ்’ என்று கூட அழைக்கத் தொடங்கிவிட்டார்கள். அதுமட்டுமன்றி, இத்திரைப்படம் ஒரு குற்றப் பின்னணியைக் கொண்ட கதையைச் சுற்றி நகர்வதால், எனக்கும் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களில் தொடர்பு இருக்குமோ என்று சிலர் வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

 'த்ரிஷ்யம் 3'
‘த்ரிஷ்யம் 3’

இந்தச் சம்பவத்தால் தனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்குப் படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்தப் புகாரில் கோரியுள்ளார்.

புகார் அளித்துள்ள ராஜீவ் வைத்திருப்பதும் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் வெவ்வேறு கார் மாடல்கள்தான். ஆனால், அதில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டில் இருக்கும் எண் அப்படியே ராஜீவின் காரோடு ஒத்துப்போகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *