கண்ணிமைக்கும் நேரத்தில் 157 உயிர்கள் பறிபோனது.. ஒரேயடியாக கொட்டிய கனமழையால் ஏற்பட்ட துயரம்! | Himachal Pradesh Rain: 157 Dead, 259 Roads Cut Off as Monsoon Wreaks Havoc, Rain will continue

Spread the love

India

oi-Vigneshkumar

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பருவமழையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் ஏற்பட்ட கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 259 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. கொட்டி தீர்க்கும் கனமழை காரணமாக இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தியாவில் இப்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் தீவிர கனமழை கொட்டி வருகிறது. அப்படி தான் இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Himachal Pradesh Rain Himachal Pradesh rain flood

157 பேர் உயிரிழப்பு

கடந்த ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 9 வரையிலான நாட்களில் கனமழை காரணமாக 157 பேர் உயரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக 68 பேரும், சாலை விபத்துகளில் 89 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 257 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. கனமழை தொடரும் சூழலில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மழையால் வீடுகள் உள்ளிட்ட சுமார் 900 இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.886 கோடி மதிப்பிலான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இமாச்சல பிரதேசம் என்பது மலைகள் நிறைந்த மாநிலமாக இருக்கும் சூழலில், தொடர் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் மாநிலத்தின் முக்கிய சாலைகள் பலவும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

சாலைகள் மூடல்

அங்குள்ள மண்டி மாவட்டம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 120 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக சம்பா மாவட்டத்தில் 42 சாலைகளும், குல்லுவில் 40 சாலைகளும், சிம்லாவில் 30 சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வந்தாலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் புதிதாக ஏற்படும் நிலச்சரிவுகள் மீட்பு பணிகளுக்கு சவாலாக உள்ளன.

குல்லு மற்றும் மண்டி மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. ஆறுகள் மற்றும் ஓடைகளில் திடீரென நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மலைப்பகுதிகளில் இருந்து மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவதுடன், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வெள்ளத்தில் கார்கள் எதோ விளையாட்டு சாமான்கள் போல அடித்து செல்லப்படும் வீடியோக்களும் பகீர் கிளப்புவதாக உள்ளன.

பாதிப்பு

கனமழையால் இமாச்சல பிரதேசத்தின் மின்சார விநியோகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 161 மின் விநியோக மாற்றிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக செயல்படாமல் உள்ளன. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மின்சார சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கனமழையால் தவிக்கும் மக்கள், மின்சாரமும் இல்லாததால் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மழை மற்றும் நிலச்சரிவால் மாநிலத்தின் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி கனமழையால் பாதிப்பு ரொம்பவே மோசமாக இருக்கிறது.

இமாச்சல பிரதேசம் மட்டுமின்றி அண்டை மாநிலமான உத்தராகண்டிலும் கனமழை மற்றும் நிலச்சரிவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சாமோலி மாவட்டத்தின் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உலோக பாலம் ஒன்று, நீரின் வேகத்தில் உடைந்து அடித்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மழை தொடரும்

இதற்கிடையே இமாச்சல பிரதேசத்தில் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காங்க்ரா, மண்டி, ஹமீர்பூர், சிம்லா மற்றும் சிர்மோர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சம்பா, குல்லு, சோலன் மற்றும் பிலாஸ்பூர் மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *