கரூர் அரசு பள்ளியில் விஜய் பேச்சு நேரடி ஒளிபரப்பு! மேலும் ஒரு தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்! | One more school Headmistress suspended for CM Vijay’s karur speech was live telecasted

Spread the love

Tamilnadu

oi-Vishnupriya R

கரூர்: கரூரில் நேற்றைய தினம் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் பேசிய பேச்சுகளை நேரலையாக ஒளிபரப்பு செய்ததாக மேலும் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினமும் இதே காரணத்திற்காக ஒரு பள்ளித் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay speech

கரூர் வெண்ணெய்மலை பகுதியில் நேற்றைய தினம் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கரூர் வேலுசாமிபுரத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியானததற்கு பிறகு முதல் முறையாக விஜய் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கரூர் வந்திருந்தார்.

இதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்கு தனி விமானம் மூலம் வந்த அவர், சாலை மார்க்கமாக கரூர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து பிரச்சார வாகனத்தின் மீது ஏறிய விஜய்யை பார்த்ததும் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். பின்னர் விஜய் பேசினார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்தது எப்படி என்பதை விளக்கினார். மேலும் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

தவெக ஆட்சியில் ஊழல் இல்லை என தெரிவித்திருந்தார். மேலும் தவெக எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை தேடி வந்த நிலையில் அவரை விஜய் கிண்டல் செய்து பேசினார்.

இவ்வாறு விஜய் பேசிய பேச்சுக்களை தவெக தொண்டர்களும் ரசிகர்களும் டிவிகளிலும் நேரிலும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த நிலையில் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விஜய்யின் பேச்சு நேரலையாக ஒளிபரப்பப்பட்டதாக ஒரு வீடியோ பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதையடுத்து கிருஷ்ணராயபுரம் பள்ளியின் தலைமை ஆசிரியை மல்லிகாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:அரசுப் பள்ளிகளில் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு இடமில்லை, உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை உறுதி!

அரசு சார்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளைத் தவிர, எந்தவொரு கட்சியின் நிகழ்ச்சியையும் பள்ளி வளாகங்களில் மாணவர்களுக்கு காட்டக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை ஏற்கனவே தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது.

இந்த உத்தரவை மீறி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு.

இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விரிவான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். விசாரணையில், பள்ளித் தலைமையாசிரியர் தன்னிச்சையாக முடிவு செய்து, துறை உத்தரவுகளையும் ஒழுங்குமுறைகளையும் மீறி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு, அவர் பணியிடை நீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளார்.

மேலும் ஒரு காணொளி குறித்தும் விசாரணை நடைப்பெற்று வருகிறது. “கல்வி நிலையங்களில் அரசியலுக்கு இடமில்லை” என்ற மாண்புமிகு முதல்வரின் ஆணையை நாங்கள் தொடர்ந்து உறுதியாக கடைப்பிடிப்போம். பள்ளிக்கூடம் கல்விக்காக, அரசியலுக்காக அல்ல என்பதே பள்ளிக்கல்வித் துறையின் தெளிவான கொள்கையாகும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழ்நாட்டின் எந்தப் பள்ளியிலும் நடைபெறாத வகையில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் கடுமையாக அறிவுறுத்துக்கிறேன்.

எனதருமை ஆசிரியர்களே.. கல்விச் சூழலைக் காப்பதும், கல்வி நிலையங்களின் நடுநிலைத்தன்மையை பாதுகாப்பதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பாகும். அரசின் உத்தரவுகளை மீறுவது யாராக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது தயக்கமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

அது போல் நேற்றைய தினம் விஜய் நிகழ்ச்சியை ஒளிபரப்பியதாக மகாதானபுரம் பள்ளித் தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *