கரூர்: “ஊழலோடு எந்தவிதமான சமரசமும் செய்து கொள்வது எந்த நாட்டுக்குமே நல்லது கிடையாது” – ஜோதிமணி கருத்து | Karur: “Compromising with corruption in any way is not good for any country” – Jothimani’s view

Spread the love

கரூர் மாவட்டத்தில் ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக பால் மற்றும் பால்வள மேம்பாட்டு துறை அமைச்சர் விஜயலட்சுமி திறந்து வைத்தார்.

முன்னதாக, ஈசநத்தம் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்ட ஆறு கூடுதல் வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்தார். பின்னர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொஞ்சனூர் ஊராட்சி தொட்டம்பட்டி பகுதியில் ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுகாதார நிலையத்தைத் திறந்து வைத்தார்.

இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.முத்துகுமரன், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜு, காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, த.வெ.க கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி, “கரூர் மாவட்டத்திற்குப் புதிய வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்வது குறித்தும் ஏற்கனவே செலவிடப்பட்ட புதிய திட்டத்திற்கான பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மின்சாரத் துறையில் வெள்ளை அறிக்கையில் ஊழல் நடந்திருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறீர்கள். ஊழலோடு எந்தவிதமான சமரசமும் செய்து கொள்வது எந்த நாட்டுக்குமே நல்லது கிடையாது. எந்தத் துறையாக இருந்தாலும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊழல் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஒரு நேர்மையான வெளிப்படையான தன்மையோடு நடக்க வேண்டும். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்ள தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது குறித்து கேட்க்கிறீர்கள்.

தமிழகத்தில் உள்ள ஆளுநர் அறிவிக்கப்படாத பா.ஜ.க மாநில தலைவராகச் செயல்படுகிறார். பா.ஜ.க-வுக்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம். எனவே, தமிழக ஆளுநர் தி.மு.க-வைச் சில நிர்பந்தங்களுக்கு உட்படுத்த, ஒப்புதல் அளிக்காமல் இருக்கலாம். எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஒரு கடினமான கூட்டத்தொடராக இருக்கும்.

ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட சில மசோதாக்கள் மீண்டும் ஒன்றிய அரசு இந்த முறை தாக்கல் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. எனவே, தென்னிந்தியாவின் நிலைமை காப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பார்கள்.

தி.மு.க-வும் கூட சில மசோதாக்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் என நம்புகிறோம். பாரதிய ஜனதாவைப் பொறுத்த வரையில் அரசியலில் அறமோ, நேர்மையோ கிடையாது. எல்லா காலக்கட்டத்திலும் அமலாக்கத் துறையைக் காட்டி மாநிலக் கட்சிகள் சிலவற்றை மிரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்தும் கேட்க்கிறீர்கள். தமிழக மக்களின் நலனுக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி எந்தச் சமரசமும் செய்து கொள்ளாது. எந்தக் காலத்திலும் செய்து கொண்டதும் கிடையாது. கர்நாடகா அரசிடம் தமிழக அரசு காவிரி ஆற்றில் நீர் பங்கீடு கேட்பது சலுகை கிடையாது. அது, ஒரு உரிமை சார்ந்த பிரச்னை.

ஏற்கனவே, இருந்த தமிழக அரசு சட்டப் போராட்டம் நடத்தி பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி செய்துள்ளது. தற்போது, அமைந்துள்ள ஜோசப் விஜய் தலைமையிலான புதிய தமிழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *