கரூர் மாவட்டம், நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த அருணன் (வயது:62), சுரேஷ் (வயது: 61) ஆகிய அண்ணன் – தம்பி மற்றும் அவர்களது உறவினரான ஸ்ரீனிவாசன் (வயது: 64) உள்ளிட்ட 7 பேர், அருணன் மற்றும் சுரேஷின் தாயாருக்குத் திதி கொடுக்கும் சடங்கிற்காக நேற்று மதியம் 12 மணியளவில் நெரூர் காவிரி ஆற்றுக்குச் சென்றிருந்தனர்.
அப்போது, காவிரி ஆற்றில் இறங்கி திதி சடங்கில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் தண்ணீர் குறைவாக இருந்ததால் ஆழமான பகுதிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, எதிர்பாராத விதமாக அருணன், சுரேஷ், ஸ்ரீனிவாசன் ஆகிய மூவரும் நீரில் மூழ்கினர்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆற்றில் மூவரும் மிதந்து கிடப்பதை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கவனித்து, உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் பரிசோதித்தபோது மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த வாங்கல் காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், உயிரிழந்த மூவரின் உடல்களை உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வாங்கல் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திதி கொடுக்கச் சென்ற மூவர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.