மலை மீது கோயில் கொண்டிருக்கும் ஈசனின் சந்நிதிகள் சாந்நித்தியம் நிறைந்தவை. எனவேதான் கடும்பாடுபட்டு பக்தர்கள் மலையேறி சுவாமியைத் தரிசனம் செய்கிறார்கள். அதன் மூலம் புத்துணர்ச்சி பெறுவதோடு ஆரோக்கியமும் அடைகிறார்கள்.
அப்படி பக்தர்கள் மனம் கவர்ந்த மலைக்கோயில்களில் ஒன்று கரூர் தொப்பையசாமி திருக்கோயில்.
கரூர் மாவட்டம், கடவூர் சென்று அங்கிருந்து மலையேறலாம். ஆண்டி ஊத்து வழி, கோட்டைக்கரை வழி என இரண்டு வழிகள் இதற்கு உண்டு. ஆண்டிஊத்து வழி சற்றுக் கடினமானது. வயதானவர்கள் கோட்டைக்கரை வழியைத் தேர்ந்தெடுப்பதே சிறப்பு.
இம்மலையை அடைய திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் ஓர் வழி உள்ளது. அதாவது திண்டுக்கல் மாவட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள பிள்ளைக்காபட்டி வழி, கோம்பை வழியாக செல்லும் வழி என இரண்டு வழிகளைப் பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

வழிகள் மட்டுமல்ல இந்த ஆலயமுமே இரண்டு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது என்றால் நம்ம முடியுமா? ஆம், சுவாமி சந்நிதி இருக்கும் இடம் திண்டுக்கல் மாவட்ட எல்லை. எதிரில் ஒன்றரை மீட்டர் தூரத்தில் – தீபஸ்தம்பமும் நந்தியும் இருக்கும் இடம் கரூர் மாவட்ட எல்லை. ஆக இரண்டு மாவட்டங்களில் எல்லையில் தொப்பேஸ்வரர் குடியிருக்கிறார்.
மலையின் உச்சியில் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக்கிறார் ஈசன். சுற்றிலும் மலைக்கற்களையே அரண் போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள் பக்தர்கள். லிங்கத் திருமேனிக்குச் செம்பினால் கவசம் செய்து அணிவித்திருக்கிறார்கள்.
உற்றுநோக்கினால் லிங்க மேனியில் பசுவின் கால்குளம்பு பதிந்ததுபோன்ற தடத்தைக் காணலாம். சந்நிதியின் எதிரில் தீப ஸ்தம்பமும் சிறியளவிலான நந்தி சிலையும் உள்ளன. அருகிலேயே உள்ள மரத்தில், வேண்டுதலின் பொருட்டு பக்தர்கள் கட்டிவைத்தத் தொட்டில்கள் தொங்குகின்றன.