கர்நாடகா: விலக்கப்பட்ட தடை; பள்ளியில் மாணவர்கள் மீண்டும் ஹிஜாப், புனித கயிறு கட்ட அனுமதி!

Spread the love

கர்நாடகாவில் இதற்கு முந்தைய பா.ஜ.க கூட்டணி அரசு கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாணவர்கள் யூனிபார்ம் தவிர எந்த வித மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. குறிப்பாக ஹிஜாப் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று குறிப்பிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நேரம் போராட்டங்கள் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது காங்கிரஸ் அரசு பா.ஜ.க அரசு கொண்டு வந்த இத்திட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டுள்ளது. அதன்படி அரசு பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி, “மாணவர்கள் பொதுவாக அணியும் தலைப்பாகை (turban), பூணூல் (janeu), சிவதாரா (shivadhara), ருத்ராட்சம் (rudraksha), ஹிஜாப் (hijab) அல்லது அது போன்ற பிற வடிவங்களிலான அனுமதிக்கப்பட்ட பாரம்பரிய மற்றும் நம்பிக்கை சார்ந்த சின்னங்களுடன் வரலாம். இருப்பினும், இத்தகைய பொருட்கள் மாணவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு அல்லது அடையாளத்தைப் பாதிக்கக் கூடாது.

புதிய விதிகளின்படி, கல்வி நிறுவனங்கள் தங்களது நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்பட்ட சீருடைக் கொள்கையைத் தொடர்ந்து கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். சீருடையின் தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், மாணவர்களின் ஒழுக்கம், பாதுகாப்பு, அடையாளம் காணல் அல்லது சீருடைக் கொள்கையின் நோக்கத்திற்குப் பாதகம் விளைவிக்காத வரையிலும், மாணவர்கள் தலைப்பாகை அல்லது பேட்டா (peta), பூணூல் (sacred thread), சிவதாரா (shivadara), ருத்ராட்ச மாலை மற்றும் ஸ்கார்ஃப் அல்லது ஹிஜாப் போன்றவற்றை அணிய இப்போது அனுமதிக்கப்படுகிறார்கள்”‘என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனுமதிக்கப்பட்ட சின்னங்களைச் சீருடையுடன் அணிந்திருக்கும் எந்தவொரு மாணவருக்கும் வகுப்பறைகள், தேர்வுகள் அல்லது எந்தவொரு கல்விச் செயல்பாடுகளிலும் அனுமதி மறுக்கப்படக் கூடாது என்று அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அதே நேரத்தில், இத்தகைய சின்னங்களை அணியுமாறோ அல்லது அவற்றை அகற்றுமாறுவோ எந்தவொரு மாணவரையும் கட்டாயப்படுத்த முடியாது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

கர்நாடகா அரசின் இந்த உத்தரவு குறித்து விஷ்வ இந்து பரிஷத் மூத்த தலைவர் கிரிராஜ் பரத்வாஜ் கூறுகையில்,”கர்நாடக மாநில அரசு கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய அனுமதித்தால், இந்து மாணவர்களும் காவித் துண்டு (saffron shawl) அணிய அனுமதிக்கப்பட வேண்டும். ஹிஜாப் சர்ச்சை முதன்முதலில் வெடித்தபோது கர்நாடக மாணவர்கள் எழுப்பிய கோரிக்கை இதுவே ஆகும். இஸ்லாமிய மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான ஆன்மீக நடைமுறை அல்ல என்று கூறி, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. சித்தராமையா அரசு இந்த சர்ச்சையை மீண்டும் கிளப்பி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்த ஏற்படுத்த முயற்சிக்கிறது,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *