கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிரபலமான மகாராஜாஸ் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியில் அங்கமாலி, சக்குவீடு பகுதியைச் சேர்ந்த ஆன்ஸ்டன் (23) என்பவர் தாவரவியல் பிரிவில் படித்துவந்தார்.
கடந்த 2024-ம் ஆண்டு கல்லூரியிலிருந்து படிப்பை முடித்து வெளியேறினார். எர்ணாகுளம் ஹாஸ்பிட்டல் ரோட்டில் உள்ள கல்லூரியின் நிர்வாகத்துக்குட்பட்ட “ராமவர்மா ஆண்கள் விடுதியில்’ தங்கிப் படித்துள்ளார்.
இவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவுக்கு மேல், கல்லூரி விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த சுமார் 20,000 ரூபாய் மதிப்புள்ள 8 இரும்புக் கட்டில்களைத் திருட முயன்றுள்ளார். இதற்காக, ‘போர்ட்டர்’ ஆன்லைன் செயலி மூலம் ஒரு சிறிய சரக்கு வாகனத்தையும் அவர் வரவழைத்துள்ளார்.
ஐந்து கட்டில்களை பாகங்களாகக் கழற்றி வாகனத்தில் ஏற்றியுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த இரவுக்காவலர் சுதேவ் என்பவர் சுதாரித்துகொண்டு, மாணவரைத் தடுத்து நிறுத்தினார்.
கட்டிலை எங்கே கொண்டுசெல்கிறீர்கள் எனக் காவலர் கேட்டதற்கு, விடுதியில் மூட்டைப்பூச்சித் தொல்லை அதிகமாக இருப்பதால், கட்டில்களைப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்காக அங்கமாலிக்குக் கொண்டு செல்கிறேன் என்று ஆன்ஸ்டன் கூறியுள்ளார்.
சந்தேகமடைந்த காவலர் கல்லூரி நிர்வாகத்தின் அனுமதி கடிதத்தைக் காண்பிக்கும்படி கேட்டார். அதற்கு ஆன்ஸ்டன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகம் அடைந்த விடுதி காவலர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற சென்ட்ரல் போலீசார், ஆன்ஸ்டனைக் கைது செய்ததுடன், கட்டில்களையும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் ஆன்ஸ்டன் கூறிய சில தகவல்கள் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.