தமிழ்நாடு மாநில காங்கிரஸின் புதிய மாநிலத் தலைவராக மாணிக்கம் தாகூர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பொறுப்புகளை மாணிக்கம் தாகூரிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்வில் காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய செல்வப்பெருந்தகை, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எந்தவொரு மகிழ்ச்சியோடு நான் இந்தப் பொறுப்பை ஏற்றேனோ, அதைவிட இரண்டு மடங்கு மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இன்று மாணிக்கம் தாகூர் அவர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன்.
தமிழக காங்கிரஸ் வரலாற்றில் பட்டியல் இனத்தைச் சார்ந்த தலைவர்களான கக்கன்ஜி, இளையபெருமாள், மரகதம் சந்திரசேகர் ஆகியோர் பணியாற்றிய நாட்களை விட, கூடுதலாக இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் 10 நாட்கள் பணியாற்றுவதற்கு எனக்கு அனுமதி அளித்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவருக்கும், இன்று தேசத்தின் முகமாக இருக்கின்ற ராகுல் காந்திக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கட்சியின் நிர்வாகத்தை மாற்றுச் சிந்தனையோடு சீரமைத்து வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், அடுத்த தலைவர்கள் எளிமையாகப் பயணம் செய்ய ஏதுவாக ‘கிராம கமிட்டி’ திட்டத்தைத் தொடங்கினோம். 17,654 கிராம வார்டு கமிட்டிகளை அமைத்து, இதன் மூலம் 1 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு கியூஆர் கோடு உடன் கூடிய உலகத் தரம் வாய்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு வருடங்கள், நான்கு மாதங்கள், 10 நாட்களில் சுமார் 270 பத்திரிகையாளர் சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஏழு முறை தமிழக மாவட்டங்கள் முழுவதும் முழுமையான சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. மக்கள் நலனுக்காக 52 முக்கிய போராட்டங்கள் நடத்தப்பட்டு, 12 முறை கைது செய்யப்பட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. தொண்டர்களின் ஆதரவோடு இந்த மக்கள் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டன.

சுமார் 37 ஆண்டுகாலமாகப் பிரச்னையில் இருந்த காமராஜர் திடலை அகில இந்திய பொறுப்பாளர் கிரி சோடங்கர் அவர்களின் வழிகாட்டுதலோடு மீட்டெடுத்தோம். நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் நமது பக்கமுள்ள நியாயத்தை ஏற்றுத் தீர்ப்பளித்ததன் மூலம், சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து கட்சிக்கும், டிரஸ்டுக்கும் சொந்தமாக்கப்பட்டது. மத்திய அரசின் ஒப்புதலைத் தவிர அனைத்து அனுமதிகளையும் ஆவணப்படுத்திப் பெற்றுள்ளோம். திருநாவுக்கரசர் அவர்கள் தலைவராக இருந்தபோது கொடுத்த பணியின் மூலம், 875 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தி அவரிடம் ஒப்படைத்த பெருமையும் எனக்கு உண்டு.
2024 முதல் 2026 வரை 2,200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டது. கரூர் நெரிசல் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்களின் வேண்டுகோளை ஏற்று டிரஸ்ட் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, இந்தியாவிலேயே 100% வெற்றி பெற்ற ஒரே மாநிலம் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி’ தான் என்ற பெருமையை நீங்கள் அனைவரும் தேடித்தந்துள்ளீர்கள்.

சத்தியமூர்த்தி பவன் புனரமைக்கப்பட்டு, தற்கால வசதிகளுடன் ஆடிட்டோரியம் உள்ளிட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் தயாராக உள்ளன. இனி சகோதரர் மாணிக்கம் தாகூர் இதனை நிர்வகித்தால் போதும். கிராம கமிட்டி, மாவட்ட கமிட்டி என அனைத்தும் பலமாக உள்ளன. டிரஸ்ட் கணக்குகள் முறைப்படுத்தப்பட்டுள்ளதால், இனி 3 கோடி ரூபாய்க்கு மேல் கல்வி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க முடியும்.
“போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து” என்பதை அறிந்தவன் நான். வயது, நோய், மரணம் ஆகியவற்றை உணர்ந்தவர்களுக்குப் பதவி என்பது என்றுமே நிரந்தரமில்லை என்பது தெரியும். அதனால்தான், முழு மனநிறைவோடு என்னை இந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு அகில இந்திய தலைமையிடம் நானே கேட்டுக்கொண்டேன். எனக்கு ஒத்துழைப்பு நல்கிய தாய்மார்கள், பெரியோர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.” என உரையாற்றினார்.