Business
oi-Vigneshkumar
டெல்லி: இந்தியாவின் அந்நிய செலாவணியை அதிகரிக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு பண வரவை அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்திய சிறப்பு அமெரிக்க டாலர்- ரூபாய் திட்டத்துக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 136 (ரூ.12.84 லட்சம் கோடி) பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு பணம் இந்தியாவுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் வெளிநாட்டு ரிசர்வ் எனப்படும் அந்நிய செலாவணி இருப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் குறைந்து வருகிறது. இது தற்போதுள்ள அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் அந்நிய செலாவணியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அமெரிக்க டாலர்- ரூபாய் திட்டம்
அதன் ஒரு பகுதியாகவே ரிசர்வ் வங்கி சிறப்பு அமெரிக்க டாலர்- ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூன் 8ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் தங்களிடம் உள்ள வெளிநாட்டு பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருவதை ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்த திட்டம் மூன்று வழிகளில் வெளிநாட்டு பணத்தை ஈர்த்தது. வெளிநாடுகளில் அந்த நாட்டின் கரன்சிகளில் என்ஆர்ஐ வைத்திருக்கும் வைப்புத் தொகை, இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு நாணய கடன்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் ஆகியவை இதில் அடங்கும்.
ரூ.12.84 லட்சம் கோடி
இந்த மூன்று திட்டங்களையும் சேர்த்து நமக்கு 136 பில்லியன் டாலர் (ரூ.12.84 லட்சம் கோடி) வந்துள்ளது. அதில் பெரும்பகுதி என்ஆர்ஐ டெபாசிட்கள் மூலமாகவே கிடைத்துள்ளது. அதாவது சுமார் 127 பில்லியன் டாலர் (ரூ.12 லட்சம் கோடி), மொத்த தொகையில் சுமார் 93 சதவீதம் என்ஆர்ஐ டெபாசிட்கள் மூலம் வந்துள்ளது. மீதமுள்ள தொகையில் வெளிநாட்டு நாணய கடன்கள் மூலம் சுமார் 5 பில்லியன் டாலரும்,வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் மூலம் சுமார் 3.8 பில்லியன் டாலரும் வந்துள்ளன.
கடைசி நாட்களில் தான் இதற்கான பணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சுமார் 73 பில்லியன் டாலர் வெளிநாட்டு பணம் வந்திருந்தது. ஆனால், கடைசி 10 நாட்களில் இந்த தொகை 136 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அதாவது கடைசி 10 நாட்களில் மட்டும் 63 பில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் இந்தியாவுக்குள் வந்துள்ளது. தேவைக்கு அதிகமான பணம் வந்ததால் டெபாசிட்களுக்கான காலக்கெடுவை செப்டம்பர் 30ஆம் தேதி வரை வைத்திருக்காமல், ஆகஸ்ட் 31ஆம் தேதியே ரிசர்வ் வங்கி முடித்துவிட்டது.
வெளிநாட்டு கரன்சிக்கள்
அதே நேரத்தில் வெளிநாட்டு நாணய கடன்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் ஆகிய இரண்டும் டிசம்பர் 31ஆம் தேதி வரை தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனவே என்ஐஆ டெபாசிட் மூலம் தொகை வராது என்ற போதிலும் இதர முறைகளில் இன்னுமே நமக்கு வெளிநாட்டு கரன்சிக்கள் வரவே போகிறது.
ஓப்பீட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால் கடந்த 2013ல் ரிசர்வ் வங்கி கிட்டத்தட்ட இதேபோல ஒரு திட்டத்தை அறிவித்திருந்தது. அப்போது சுமார் 26 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது. ஆனால் தற்போதைய திட்டம் ஏற்கெனவே அதைவிட 5 மடங்குக்கும் அதிகமான தொகை திரட்டப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டு பண வரவு இந்தியாவின் நிதி பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏகப்பட்ட மாற்றங்கள்
கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச சந்தையில் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. ஒரு பக்கம் கச்சா எண்ணெய் விலை உயரும் நிலையில், இன்னொரு பக்கம் வெளிநாட்டு முதலீடுகள் வேகமாக வெளியேறி வருகிறது. இதனால் நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு முக்கியமானதாக மாறியிருக்கிறது. அதை கருத்தில் கொண்டே இப்போது ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.