தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அன்பழகன், தவராஜா, ரகுநாதன் ஆகியோர், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதில். “எங்கள் கிராமத்தில் இறந்து போனவர்களின் உடல்களை சுக்குவாடன்பட்டி மயானத்தில் தகனம் செய்து வந்தோம். இப்போது அந்தக் கிராமத்தினர் எங்கள் கிராம உடல்களை எரிக்க அனுமதிக்க மறுக்கின்றனர். இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகிய நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கின் மனுதாரர்கள் பொம்மையகவுண்டன்பட்டி கிராமம், தேனி அல்லிநகரம் நகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. பொம்மையகவுண்டன்பட்டி அருகிலேயே சுக்குவாடன் பட்டி அமைந்துள்ளதால் அந்தக் கிராமத்தின் மயானத்தைப் பயன்படுத்துவது வசதியாக இருக்கும் என்று மனுதாரர்கள் கூறுகின்றனர்.
இதனை சுக்குவாடன் பட்டி கிராம மக்கள் எதிர்க்கின்றனர். சுக்குவாடன்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து நிலம் ஒன்றை வாங்கி மயானம் அமைத்து அதை தங்களுடைய ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து உள்ளனர்.

தற்போது அது ஊஞ்சாம்பட்டி ஊராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த மயானத்தை பொம்மையகவுண்டன்பட்டி கிராம மக்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று உரிமை கோர முடியுமா என்பதுதான் கேள்வி
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஒருவர் உயிருடன் இருக்கும்போது எவ்வாறு நடத்தப்படுகிறாரோ, அவர் இறந்தபின் அவரது உடலையும் அதே போல நடத்த வேண்டும். ஆனால் ஒரு உள்ளாட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான மயானத்தை மற்றொரு உள்ளாட்சியினர் பயன்படுத்த சட்டத்தில் இடம் இல்லை.