இதனால் வாக்குவாதம் ஏற்பட, நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஆத்திரமடைந்த கிராம மக்கள், இறந்த அண்ணாமலையின் உடலை பொம்மதாசம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பொதுச் சாலையிலேயே புதைக்க முடிவெடுத்தனர். அதன்படி சாலையில் குழி தோண்டத் தொடங்கியதால், கிராமத்தில் பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.
இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராமமூர்த்தி, தாசில்தார் ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, “இடுகாட்டுக்காக ஊருக்கு ஒதுக்குப்புறமாக இரண்டு ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், அந்த இடத்தை வருவாய்த்துறையினர் இதுவரை நில அளவீடு செய்து, சுடுகாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கவில்லை.
மேலும், அந்த இடத்திற்குச் செல்வதற்கும் முறையான வழிப்பாதையும் இல்லை. எனவே, வருவாய்த்துறையினர் உடனடியாக நிலத்தை அளவீடு செய்து, மயானத்திற்குச் செல்ல முறையான வழிப்பாதையை ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றனர்.
இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால் சாலையில் உடலை அடக்கம் செய்யும் முடிவை மக்கள் திரும்பப் பெற்றனர்.