கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டை என்பது இந்த தேர்தலில் நொறுங்கிப்போயுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க இடையேதான் நேரடி போட்டி நிலவும். காங்கிரஸ் கூட்டணிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் சிறுபான்மையினர் வாக்குகளையும், பா.ஜ.க பெரும்பாலான இந்து வாக்குகளையும் பெற்று வந்தன.
இதனால் காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கும் நேரடி மோதல் ஏற்படும். பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணி வெல்வதும், பா.ஜ.க இரண்டாம் இடத்தில் வந்து கெத்தாக நிற்பதையும் பார்க்க முடியும்.
இந்த சட்டசபை தேர்தலிலும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், த.வெ.க அலை கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரையை மூன்றாம் இடத்துக்கு தூக்கிப்போட்டுவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க போட்டியிட்டது.
நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்திலும், கிள்ளியூர் தொகுதியில் த.மா.க வேட்பாளர் தாமரைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.
நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி என முக்கிய வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.